நம் எல்லோரையும் அச்சுறுத்தும் ஒரே விஷயம் “பயம்” மற்றும் அதனால் நம் வாழ்வில் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் தான். பயம் ஏன் ஏற்படுகிறது, ஒருவரது வாழ்க்கையில் அதன் பாதிப்புகள் எவ்வளவு தூரம் வரை செல்லும், பயத்தை போக்கும் வழிகள் என்ன என்பது குறித்த ஆராய்ச்சிகளுக்காக உளவியல் அறிஞர்களான ஜேம்ஸ் மெசினா மற்றும் கான்ஸ்டான்ஸ் மெசினா, அவர்களுடைய வாழ்க்கையை 30 வருடங்களுக்கும் மேலாக அர்ப்பணித்திருக்கிறார்கள். பல பேர்களின் கேஸ்களை கண்ட அவர்களுடைய ஆராய்ச்சிகளின் முடிவாக அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
“ஒருவர் தமது பயங்களை கண்டறிந்து அவற்றை வகைப்படுத்துவதன் மூலமாகவும் அதற்கு மாற்றாக எளிய ஒரு மனப்பயிற்சியை செய்வதன் மூலமாகவும் பயத்தால் விளையும் எதிர்மறைகள் மட்டுமல்ல வேறு எந்த விதமான நெகட்டிவ் சிந்தனைகளையும் நிறுத்தி நேர்மறையாக்க முடியும்.”
இதை எப்படி செய்வதென்பதற்கு அவர்களே பின்வரும் வழிமுறைகளை தெரிவிக்கின்றனர்.
முதல் படியாக ஒருவர் தனக்கு எந்த மாதிரியான பயங்கள் என்ன காரணங்களுக்காக விளைகின்றன என்பதை தனது அன்றாட வாழ்க்கையில் கண்டறிந்து ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வகைப்படுத்த வேண்டும். அதன் பின்னர் கீழ்காணும் ஐந்து படிகளை முறையே செய்ய வேண்டும்.
முதல் படி
உங்கள் பயங்களை வகைப்படுத்தி பட்டியலிட்ட பின்னர், அதனை மேலிருந்து கீழாக உங்களை அதிகம் பயமுறுத்தும் விஷயம் முதல் லேசான பயம் வரை என்று மாற்றியமைத்து எழுத வேண்டும்.
இரண்டாவது படி
பயங்களை அவற்றின் தன்மைக்கு ஏற்றபடி பட்டியலிட்டப் பிறகு, அவற்றை போக்குவதற்கு உங்கள் மனம் ஏதாவது வழிகளை கொண்டிருக்கிறதா, அந்த பயங்கள் குறித்து மனம் கொண்டிருக்கும் பல கருத்துக்கள் யாவை என கீழ்காணும் கேள்விகளை கேட்டு அவற்றையும் எழுதிக் கொள்ள வேண்டும்.
- இந்த பயங்கள் எந்த அளவில் உண்மையானதாக இருக்கிறது?
- என்னுடைய கடந்த கால மற்றும் நிகழ் கால வாழ்க்கையில் இந்த பயங்கள் என்ன மாதிரியான பாதிப்புகளை உண்டாக்கியிருக்கின்றன?
- என்னை பற்றிய என்னுடைய பிம்பம், என் சுயமரியாதை ஆகியவற்றில் இந்த பயங்கள் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது?
- என்னை இந்த பயங்கள் எந்த மாதிரியெல்லாம் பலவீனப்படுத்துகிறது?
- என் செயல்களை எந்த மாதிரியெல்லாம் செய்ய விடாமல் இவை தடுக்கின்றன?
- என் சிந்தனை ஓட்டத்தை என் எண்ணங்களை இந்த பயங்கள் எந்த மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்தி பாதிக்கின்றன.
- இந்த பயங்கள் எல்லாம் எத்தனை காலமாக என்னிடத்தில் இருக்கின்றன.
- உண்மையில் இவை என்னிடத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியவை தானா?
படி மூன்று
இரண்டாவது படியில் கூறியபடி அவற்றை குறித்து முழுவது அலசி ஆராய்ந்து அவற்றை கண்டிப்பாக வெளியேற்றவேண்டும் என்ற முடிவுக்கு வந்த பின்னர் அவற்றிற்கு எதிராக போராட மேலும் சில கருத்துக்களை கீழ்காணும் கேள்விகளை விடைகளாகக் கண்டு மனதிற்கு பதிய செய்ய வேண்டும். அந்த விடைகளை அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொள்ள வேண்டும்.
- ஏதாவது ஒரு செயலில் ஒரு தீர்மானம் எடுக்கும் வேளையில் இந்த பயங்கள் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகின்றன? நாம் ஏதோ ஒரு பயத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கிறோமா?
- உங்கள் பாதுகாப்பின்மையை எந்த அளவிற்கு இந்த பயங்கள் எடுத்தியம்புகின்றன?
- உங்களை மாற விடாமல் இவை எந்த அளவுக்கு தடுக்கின்றன.
- மற்றவர்களிடம் இருந்து கிடைக்கவிருக்கும் சகாயங்களில் இந்த பயங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?
- மற்ற மனிதர்களிடம் இருந்து உங்களை எந்த அளவிற்கு தனியே இந்த பயங்கள் வைத்திருக்கின்றன?
- உங்களுடைய தனிப்பட்ட, பொது மற்றும் தொழில் இலக்குகளை எப்படியெல்லாம் இந்த பயங்கள் பாதித்திருக்கின்றன?
- உங்களுடைய அழிவு சிந்தனைகளில் எந்த அளவிற்கு இந்த பயங்களின் பாதிப்புகள் இருக்கின்றன?
நான்காவது படி
இப்போது இந்த பட்டியலைக் கொண்டு ஒவ்வொன்றாக அதாவது ஒவ்வொரு பயமாக அவற்றை நேரிடுவதற்கு தாயாராக வேண்டும். முதலில் உங்களை அதிகம் பாதிக்கும் மிகப்பெரிய பயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஐந்தாவது படியை உபயோகித்து பயத்தை போக்க மனதை பயிற்றுவிக்க வேண்டும். அதன் பின் அடுத்த பயம், அதற்கடுத்தது என பின்பற்ற வேண்டும்.
ஐந்தாவது படி
ஒரு குறிப்பிட்ட பயத்தை இப்போது தேர்ந்தெடுத்திருப்பீர்கள். அதனை விரட்டியடிக்க “ஸ்டாப்” எனும் முறையை பின்பற்ற வேண்டும். அதாவது “ஸ்டாப்” எனும் வார்த்தையை ஒரு நிமிட, இரண்டு நிமிட, மற்றும் மூன்று நிமிட இடைவெளியில் 30 நிமிடங்களுக்கு பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த பயம் குறித்த சிந்தனைகளை மனதில் ஓட விட வேண்டும். உடன் இந்த பதிவெற்றப்பட்ட ஆடியோவை இயக்க வேண்டும். ஒவ்வொரு முறை “ஸ்டாப்” என்கிற சப்தத்தை கேட்கும் போது அந்த சிந்தனையை நிறுத்தி விட வேண்டும். மீண்டும் சிறிது இடைவெளியில் அந்த சிந்தனைகளை தொடர வேண்டும். ஸ்டாப் சப்தத்தில் நிறுத்தி விட வேண்டும். இதை செய்யும் போது ஒன்றிரண்டு வாரங்களில் உங்களுக்கு அந்த குறிப்பிட்ட பயம் நீங்கியிருக்கும்.
என்ன நடக்கிறது இங்கே?
நமது பயம் குறித்த அனைத்து சிந்தனைகளையும் நாம் பட்டியலிட்டு அதே சிந்தனைகளை இந்த ஸ்டாப் பயிற்சியின் போது சிந்திக்கிறோம். இவை அனைத்தும் நமது ஆழ்மனதில் பதிந்திருக்கும் பதிவுகள். இப்போது ஸ்டாப் எனும் சப்தம் கொண்டு இந்த சிந்தனைகள் வரும் நேரத்தில் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறோம். அதாவது ஸ்டாப் சொல்லும் போது இந்த சிந்தனைகள் அறவே கூடாது என்று நமது ஆழ்மனதை நாம் பழக்கப்படுத்துகிறோம். அந்த பழக்கமே சிறிது நாட்களில் நமது பயத்தை புறந்தள்ளி விடுகிறது.
எனது தனிப்பட்ட கருத்து “ஸ்டாப்” மட்டும் தான் சொல்ல வேண்டும் என்றில்லை. எந்த வார்த்தை வேண்டுமானாலும் சொல்லலாம். நான் “வாழ்க வளமுடன்” என்று சொல்லுவேன். அது எனக்கு பயனளித்திருக்கிறது. நீங்கள் உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் பெயரோ, அல்லது ஒரு சிறிய நேர்மறை வார்த்தையோ உபயோகித்துக் கொள்ளலாம்.
நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!