உலகில் எல்லாவற்றிலும் எல்லாவர்க்கும் நன்மை பயக்க எல்லா மதங்களும் பின்வரும் ஒரு விஷயத்தை போதிக்கின்றன. இதனை நாம் “பொன் விதி” என்கிறோம். எல்லா மதங்களின் கோட்பாடுகளிலிருந்து ஒரே ஒரு அடிப்படை விஷயத்தை பிழிந்து எடுக்க வேண்டும் என்றால் அது “அன்பு” என்று வந்து நிற்கும். அந்த அன்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டதுதான் இந்த பொன்விதி.
“உங்களுக்கு என்ன நன்மைகள் நடக்க வேண்டும் என்று நீங்கள் விருப்பப்படுகிறீர்களோ அதே பிறருக்கும் நடக்க வேண்டும் என்று விரும்புங்கள். வாழ்த்துங்கள்.”
என்று சொல்கிறது பொன்விதி.
“மற்றவர்களுக்கெல்லாம் நன்மை நடக்கிறதே, எனக்கு மட்டும் நடக்கவே மாட்டேன் என்கிறதே” என்று எல்லோரும் பொறுமித் தள்ளும் இந்த காலகட்டத்தில் இப்படியொரு விஷயம் சாத்தியமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் எல்லா மதங்களும் இந்த ஒரே விஷயத்தை சொல்கின்றன என்றால் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா?
“நீ உன்னை நேசிப்பது போல உன் அயல்காரரையும் நேசி” என்கிறது பைபிள். இன்னும் பாருங்கள்
“ஆகவே உங்களுக்கு மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையே நீங்கள் அவர்கள் பண்ணுங்கள். இதுவே நீதிமான்களின் விதியாகும்” மத்தேயு : 7:12
உங்களுக்கு வெறுப்பானவை எதுவோ அதை உங்கள் சகமனுஷ்யருக்கு பண்ணாதிருங்கள். இதுதான் விதி மற்றவை எல்லாம் இதற்கான விமர்சனங்களே.
-யூதமதத்தின் தால்முட், ஷப்பத்31ஏ
உங்கள் அயல்காரரின் லாபத்தை உங்கள் லாபமாக நினைத்து மகிழுங்கள். அவரின் நஷ்டங்களில் அவற்றை உங்களுடையதாக எண்ணி பங்கு கொள்ளுங்கள்.
-தாவோயிஸம்.
கன்ஃப்யூசியஸிடம் ஒரு நள் த்சே-கங் கேட்டார், “வாழ்க்கையின் மிகச்சிறந்த கொள்கை எதுவென்று கேட்டால் ஒரு வார்த்தையில் எதையாவது சொல்லிவிட முடியுமா?”.
“ஷூ” என்று பதிலளித்தார் கன்ஃப்யூஷியஸ். “உனக்கு என்ன வேண்டாமோ அதை மற்றவரிடத்திலும் திணிக்காதே” என்றுரைத்தார்.
(டாக்டரின் ஆஃப் மீன் 13.3)
“ஷூ” என்றால் “பரஸ்பரம் மாற்றிக் கொள்ளுதல்” என்று அர்த்தம்.
நீதியின் மார்க்கமாக உங்கள் கண்பார்வை திரும்புகிறது என்றால், நீங்கள் உங்களுக்கு எதை தேர்ந்தெடுக்கிறீர்களோ அதையே உங்கள் அயல்காரருக்கும் தேர்ந்தெடுங்கள்.
-பாஹாய்
உலக ஒருமைத்துவத்துக்கு என்று பாடுபடும் யாவரும் சொல்லும் ஒரே கருத்து இதுதான், “இப்பிரபஞ்சத்தில் இந்த இருத்தலின் வலைபின்னலில் அதன் பகுதியாக நாம் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கிறோம். ஒன்றாகவே இருக்கிறோம்.
டாக்டர் ஜோசஃப் மர்ஃபி, நெப்போலியன் ஹில் போன்றவர்கள் வளசிந்தனை பற்றி குறிப்பிடும் போது “பொன் விதிதான் வளசேர்க்கைக்கு வித்திடும் உண்மையான பொன்னான விதி என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!