ஒரு சிறுவன் தன் தாயிடம் சென்று “அம்மா யாரம்மா அந்த முதியவர், அந்த மலை மேல் உட்கார்ந்து கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறாரே. எல்லோரும் அவரை வணங்கிவிட்டு செல்கிறார்களே. யாரம்மா அவர்?” என்று வினவினான்.
உடனே அந்த பெண்மனி அவனை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டிவிட்டு, “அவரை முதியவர் என்றழைக்காதே. அவர்தான் புத்த பெருமான். அவருக்கு இந்த உலகத்தில் தெரியாத விஷயமே இல்லை. இப்பிரபஞ்சத்தில் எந்த கேள்விக்கும் அவரிடம் பதில் கிடைக்கும்” என்றாள்
“என்ன எல்லாம் தெரிந்தவரா?”, என்று யோசித்தப்படியே அங்கிருந்து நடையை கட்டிய சிறுவன் அதையும் சோதித்து விடுவது என்று முடிவெடுத்தான். நேரே அவர் தவம் செய்து கொண்டிருந்த மலைக்கு சென்றான். புறப்படும் போது கூடவே வழியில் ஒரு பட்டாம்பூச்சியை பிடித்து சென்றான். வழக்கம் போல அவரைக் கண்டு பலரும் வணங்கிச் சென்றனர். இவன் நேராக புத்தரிடத்தில் சென்றான். அவன் சென்றதும் மௌனம் கலைந்தவராக புத்தபெருமான் அவனை நோக்கினார்.
தன் கையில் உள்ள பட்டாம்பூச்சியை இருகையால் மூடிய படி, “தங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமாமே. அம்மா சொன்னார். என் கையில் இருக்கும் இந்த பட்டாம்பூச்சி உயிரோடு இருக்கிறதா இல்லையா என்று சொல்லுங்கள் பார்ப்போம்”, என்று கேட்டான். அவனுக்கு ஒரு வேளை புத்தர் உயிரோடு இருக்கிறது என்று சொன்னால் அதைப் பிடித்து நசுக்கி சாகடித்து விடலாம். செத்து விட்டது என்று சொன்னால் உயிரோடு அதனை பறக்க விட்டு அவர் மூக்குடைக்கலாம் என்று எண்ணம். இந்த புத்தருக்கும் எல்லாம் தெரியாது என்று அனைவர் முன் காட்டவேண்டும் என்று எண்ணினான்.
மௌனமாக அவனையே உத்து பார்த்த புத்தரிடம் மீண்டும் கேட்டான், “ம்… சொல்லுங்கள். இது உயிரோடிருக்கிறதா. அல்லது செத்து விட்டதா?,”
ஒரு சிறு புன்னகையுடன் புத்தர், “பதில் உன் கையில் தான் உள்ளது மகனே”, என்றார் அமைதியாக.
நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!