“என்னப்பா வாழ்க்கை எப்படி போகிறது” என்ற கேள்விக்கு எப்போதுமே நம் பல பேரிடம் இருக்கும் பதில்,
“அது எங்கேப்பா.. அப்படியே தான் போய்க் கொண்டிருக்கிறது” என்பதுதான்.
நாம் எல்லோரும் நம் வாழ்வில் “வளர்ச்சி” என்று ஒரு விஷயத்தை மையமாக வைத்து ஓடிக் கொண்டிருப்போம். அதிலும் பிறருடன் ஒப்பிட்டு ஓடும் அந்த ஓட்டத்தில்தான் எத்தனை எத்தனை கஷ்டங்கள். மற்றவரை போல நாம் முன்னேறி விட மாட்டோமா. அவனை போல ஆகி விட மாட்டோமா, “எனக்கு பிறகு பிறந்த பயல். அவன் அடுக்குமாடி வீடு சொந்தமாக கட்டி விட்டான். ஆனால் நான் இப்படியே இருக்கிறேனே” என்பது போன்ற வெதும்பல்களோடு வாழ்க்கை ஓடிக் கொண்டே தான் இருக்கிறது.
நான் கூட பல வருடங்களுக்கும் முன்பு இப்படி எப்போதும் நினைத்துக் கொண்டே இருந்தது உண்டு. ஆனால் வாழ்க்கையில் நம் ஒவ்வொருவர் ஓட்டமும் தனித்தது தான் என்றும், நம் வாழ்க்கையில் மற்றொருவரோடு ஒப்பிடுதல் என்பது கூடவே கூடாது என்று என் பிடரியில் அடித்து எனக்கு பல்வேறு அனுபவங்கள் வாயிலாக சொல்லிக் கொடுத்தது பிரபஞ்சம். என் வரையில் நான் ஓடிக் கொண்டுதான் இருக்கிறேன். எங்கும் சோர்ந்து விடவில்லை. மனதை தளரவிடவில்லை. அப்படியென்றால் எனது செயல்கள் எதையோ விதைத்துக் கொண்டிருக்கின்றன என்றல்லவா அர்த்தம்?
“நான் கஷ்டப்பட்டுத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் அதற்கேற்ற பலனே இருக்கமாட்டேன் என்கிறது”, என்று மனம் நொந்து போய் அப்படியே ஓடிக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்கென்னவோ அவர்களுக்கு பிரபஞ்சத்தின் வடிவமைப்பு புரிகிறதோ என்னவோ தெரியவில்லை. நான் எப்போதும் எங்கும் சொல்லும் ஒரு விஷயம் உண்டு “இப்பிரபஞ்சத்தில் ஒரு எண்ணம் கூட பாழாய் போகாது”. நான் எப்போதும் என் வாழ்க்கையில் ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட ஒரு விஷயம் இது.
“நான் என் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ அதற்கான பாதையில் சரியாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தேவையானவற்றை இப்பிரபஞ்சம் சரியான தருணத்தில், தக்க சமயத்தில் எனக்கு வெளிப்படுத்தும்”
நாளடைவில் நான் பிறரோடு உள்ள ஒப்பீடுகளை குறைக்க ஆரம்பித்தேன். என் வரையில் நான் என்ன செய்ய வேண்டுமோ அதில் மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அவ்வப்போது நான் என் வாழ்க்கையில் என்ன செய்திருக்கிறேன் என்று சுயபரிசோதனை செய்து கொள்வது உண்டு. இதற்காக அவ்வப்போதும் பிரத்யேக நேரம் ஒதுக்குவதுண்டு. அப்படி ஒரு முறை சுய பரிசோதனையின் போதுதான் நான் இதுவரையில் முழுமையாக வேர்ப்பிடித்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது புரிந்தது.
சிலர் சட்டென்று பணக்காரராகி விட்டால் உடனே உலகம்
“அவன் ஏதோ தப்பான வழியில் சம்பாதிக்கிறான்,” என்று சொல்வார்கள். உண்மையில் அந்த வளர்ச்சிக்கு முன்பு அவர் எத்தனை தயாரெடுப்பு எடுத்து தான் வளர வேர்பிடித்துக் கொண்டிருந்திருப்பார் என்பதை நம்மால் அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது. ஆனால் உலகுக்கு தெரிவதெல்லாம் அந்த வளர்ச்சி மட்டுமே.
நீங்கள் பலப்பொழுதும் மூங்கிலின் வளர்ச்சியை கண்டிருக்கலாம். போன மாதம் வரை குட்டையாக இருந்த அது திடீரென்று பலமடங்கு பல அடிகள் உயரமாய் சட்டென்று உயர்ந்து நிற்பதை நீங்கள் கண்டிருக்க வாய்ப்புண்டு. பல மரங்கள் சாதாரண காற்றுக்கும் மழைக்குமே வேரோடு சாய்ந்தாலும் எத்தனை பெரிய புயல் வந்தாலும் மூங்கில் மேலே வளைந்து கொடுத்தும், வேர் வரையில் ஆழமாய் இறுக்கப் பிடித்தும் நிலைத்து இருப்பதை நாம் காண முடியும்.
இயற்கை இந்த மூங்கிலின் மூலமாக சொல்ல வருவது என்ன என்று இது வரையிலும் உங்களுக்கு புரியவில்லை என்றால் உங்களுக்காக மூங்கிலின் கதை எனது காணொளி வாயிலாக
என்ன புரிந்ததா? கீழ்காணும் விஷயங்களை மனதில் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள்
- வேர்கள் பிடித்திருக்கிறதா என்று மட்டும் கவனியுங்கள்: உங்களின் வளர்ச்சி என்பது தள்ளிப் போகிறதா? அப்போது உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். கண்டிப்பாக உங்களில் பல விஷயங்களை படர்த்தி ஆழமான மற்றும் அடர்த்தியான வேராக படர செய்திருக்கும் பிரபஞ்சம்.
- ஒப்பீடுகளை தவிருங்கள்: சிறு செடிகள், மரங்கள் என்று பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வளர்ச்சி வேகம். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு உபயோகம். உங்கள் வளர்ச்சியும் பாதையும் தனித்தது தான். காலம் போனதை அல்லது போவதை பற்றி வருத்தம் கொள்ளத் தேவையில்லை. ஒப்பீடுகளைக்
- கிளைகள் பரப்ப அதிக நேரம் தேவையில்லை: நீங்கள் ஆழமான வேர்கள் பிடித்த பின்னர் உங்கள் வளர்ச்சிக்கு அதிக காலம் தேவைப்படாது. எனவே கவலை வேண்டாம். அந்த நேரத்தில் உலகமே உங்களை அண்ணாந்து பார்க்கும்.
- உலகம் ஆயிரம் சொல்லட்டும்: திடீரென்று உயரங்கள் தாண்டும் போது சந்தேகிக்கும் உலகத்தின் வாயை நாம் பொத்த முடியாது. அதற்கு தெரியாது மண்ணிற்கு அடியில் வேர்கள் பரப்ப நாம் எவ்வளவு கடினமாக செயல்பட்டுக் கொண்டிருந்தோம் என்று. எனவே உண்மை தெரியாத அதனை கவனித்து கவலை கொள்ளாமல் சொன்னால் சொல்லி விட்டு போகட்டும் என்று மன்னித்து விட்டு விடுங்கள்.
அகம் உங்கள் வாழ்வில் அற்புதங்கள் மலர செய்யட்டும்!
நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!