ஒரு நாள் அன்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டே இருக்கும் போது “சார் பிரபஞ்சம் பிரபஞ்சம் அப்படின்னு சொல்றீங்களே. அப்படின்னா என்னன்னு தெளிவா சொல்லுங்க சார். பிரபஞ்சம் கேட்டா குடுக்கும்னு சொல்றீங்களே அப்போ நாம கேட்டதை கொடுப்பது கடவுள் இல்லையா?”, என்று கேட்டார். எனக்கு அந்த சமயத்தில் தான் பொட்டில் அடித்தாற் போல ஒரு உண்மை புலப்பட்டது. இதன் அடிப்படை தெரியாமல் பிரபஞ்ச விதிகளைப் புரிந்து கொள்ள வற்புறுத்துவது என் தவறுதான். நம்மில் காலாகாலமாக இறைவனைக் குறித்து மற்றோர் தெரிவித்த கருத்துக்களே வேரூன்றி வந்துள்ளது. ஆனாலும் அவ்வப்போது மண்ணில் தோன்றிய சித்தர்கள் போன்ற மகான்கள் அந்த கருத்துக்களை தானே அகத்தில் சென்று உணர வேண்டும் என்று உரைத்து சென்றுள்ளனர். அதை அப்படியே முழுவதும் கடைப்பிடிக்கவில்லையென்றாலும் ஒரு அளவிற்காகவாவது புறத்தை நோக்கிய கேள்விகளை அகத்தை நோக்கி திருப்பி விட்டிருந்தால் பல விதத்தில் உலகம் நன்மை பெற்றிருக்கும். வேண்டுபவன் தானே தேட வேண்டும் என்பதுதான் வடிவமைப்பு.
பிரபஞ்சம் என்பது எங்கேயோ இல்லை. அதற்குள் தான் இந்த அண்ட பேரண்டங்கள் அடங்கியுள்ளன. அவைகளில் ஒன்றிற்குள் தான் இந்த பூவுலகம் இருக்கிறது. அதனுள் தான் நாம் இருக்கிறோம். அதே படி பார்த்தால் இந்த பிரபஞ்ச தோற்றத்திற்கெல்லாம் காரணமான மூலமான தெய்வீகத் துகளானது நம் கருமையத்தை நிரப்பியுள்ளது. அப்படி பார்க்கும் போது நாமெல்லாம் அந்த தெய்வீகத்தின் படைப்பு சிதறலே. இதை இந்த நான்கு வரிகளில் விளக்கி விட முடியாது. அதனால்தான் இதனை நான் ஒரு தொடராக தொடங்கியுள்ளேன்.
பல காலங்களாக மனிதன் அறிந்து கொள்ள முற்படும் ஒரு ரகசியம் உள்ளது. எல்லாவற்றிற்குமான மூலம் எது, தோற்றத்திற்கான காரணப் பொருள் எது, பிறப்பிற்கான காரணம் என்ன, எது எல்லாவற்றையும் இயக்குகிறது என்பது போன்றவற்றை விளக்கும் “பேருண்மைக்கான” தேடலே அது. இவ்வுலகில் எல்லாவற்றையும் அறிய வைக்கக் கூடிய முதல் தத்துவம் அது. அதனை அறிந்தவர் பிறகு வேறு எதற்கும் சந்தேகம் என்று வாயை திறக்கவே மாட்டார்.
ஒரு ஜென் குருவிடம் அவரது மாணாக்கன், “குருவே இந்த முதல் தத்துவம் என்கிறார்களே. அதனை நீங்கள் எனக்கு விளக்க முடியுமா?”, என்று கேட்டான்.
அதற்கு அந்த குருவோ, “ஒரு வேளை அதனை நான் உனக்கு விளக்கிக் கூறுவதாக இருந்தால் அது அதற்கு மேல் முதல் தத்துவமாக இருக்காது. கண்டிப்பாக இரண்டாவது தத்துவமாக மாறிவிடும்” என்று பதிலுரைக்கிறார்.
அதுதான் உண்மையும் கூட. விளக்கி சொன்னாலும் தானே விளங்க வேண்டிய ஒரு உண்மை பொருள் அது. தானே விளங்கும் வரை தெளிவாகாது. இந்த தொடர் முழுவதும் நான் உங்களுக்கு நீங்களே விளங்கிக் கொள்ள சிலவற்றை க்ளூக்களாக தரப்போகிறேனே ஒழிய இதுதான் அது என்று எங்கும் வாதம் செய்யப் போவது கிடையாது.
நான் இந்த தொடர் கட்டுரைகளில் தரப்போவதை நீங்கள் ஒரு சுட்டுக் குறிப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தேடலும் அதன் விளைவாக பெறப்போவதும் உங்களைப் பொறுத்தமட்டில் இருக்கும் விஷயங்களே.
பல்லாயிரக்கணக்கான செல்களை கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த உடல் என்பது. உடலின் ஒவ்வொரு பகுதியும் வேதியியல் உருவாக்கமான செல்களால் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு செல்லும் அணுக்களால் நிரப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணுவினுள்ளும் எலக்ட்ரான்கள், நியூட் ரான்கள், ப்ரோட்டான்கள் நிரம்பியுள்ளன. நியூட் ரான்கள் மேலும் நியூட் ரினோக்களால் உருவாக்கப்படுகின்றன. இந்த நியூட் ரினோக்களையும் பிளந்தால் மிக நுண்ணியதான குவார்க்குகள் நிரப்புகின்றன. இந்த குவார்க்குகளை குவாண்டம் ஆற்றல் எனப்படும் ஆற்றல் இயக்குகிறது. சரியாக சொன்னால் பிரபஞ்சத் தோற்றத்திற்கெல்லாம் காரணமான ஆற்றல் அது. பிரபஞ்ச தோற்றத்திற்கெல்லாம் மூலமான ஏதுமில்லாத ஒன்றை இயக்கிய ஆற்றல் அது. இந்த ஆற்றலைக் குறித்து தான் நாம் எப்போதும் யோசிக்க வேண்டும். அந்த ஆற்றலானது எது? எந்த நுண்ணறிவு அதனை இயக்கியது? போன்ற கேள்விகள் இங்குதான் எழ வேண்டும். இந்த கேள்விகளை நீங்கள் கேட்டு பதில் பெற்றுக் கொள்ளுங்கள் என்று விட்டு விடுகிறேன்.
ஆனால் ஒன்று மட்டும் அறிவியல் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறது. அதாவது இந்த உடலானது இந்த குவார்க்குகள் உருவாக்கிய செல்களால் உருவாகிய ஒரு பிண்டம் என்பது. ஆற்றலை வெளிப்படுத்து குவார்க்குகளால் உருவாக்கிய நாம் ஆற்றலின் வடிவமே. இது அனைத்து உயிருக்கும் பொருந்தும். பிரபஞ்சத்தில் காணக்கூடியவை காணமுடியாத சூட்சுமமானவை என்று எல்லாமும் ஆற்றலின் வடிவமே. இந்த ஆற்றலானதுக்கு தோற்றமும் இல்லை முடிவும் இல்லை. ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற முடியுமேயொழிய (Transformation by transfer of energy) ஒன்றிற்கு முடிவென்பதே கிடையாது. இதற்கெல்லாம் காரணமான ஒரு பேராற்றல். இதைத்தான் நாம் பிரபஞ்ச மூலம் எனவும், இறை அல்லது ஆதிமூலம் என்றும் மூலப்பரம்பொருள் என்றும் காலந்தோறும் கூறி வருகிறோம். இந்த பேராற்றலுக்கு தானே ஏற்பட்ட ஒரு நுண்ணறிவின் ஊக்கத்தால் தான் இப்போது நாம் காணும் அனைத்தும் இந்த பிரபஞ்சத்தில் உண்டாயிருக்கின்றன.
ஏற்கனவே எதற்கும் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. வெறும் தன்மாற்றம் மட்டும் தான் என்று கூறியிருந்தோம். எனவே ஒரு எண்ணமானது உருவானாலும் அது அதிர்வலைகளாக ஆற்றலாகவே இப்பிரபஞ்ச மையத்தில் நிலைபெறுகின்றன. ஒவ்வொரு அனுபவமும், நிகழ்வும் கூட இப்பிரபஞ்சத்தில் அப்படியே ஆற்றலாகவே நிலை பெறுகின்றன. இதன் உண்மை நிலையை அறிவியலால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி கண்டறிந்த மெய்ஞானியர் அதனை உலகிற்கு சொன்னதும் இல்லை. நினைவிருக்கட்டும் முதல் தத்துவம். ஆனால் அறிவியல் உலகம் இதற்கு பிரபஞ்ச பேரறிவு (Cosmic Consciousness) என்று பெயரிட்டுள்ளது. ஆதி முதல் அந்தம் வரை நிகழும் அத்தனை விஷயமும் இதில் பதிவாகிப் போகிறது.
“இவ்வுலகில் நாமும் நம் மூதாதையர்களும் மற்ற பிற இனங்களும் ஏதோ ஒரு வகையில் இணைக்கப் பட்டிருக்கிறோம். இவை இப்பூமி தோன்றிய நாள் முதலே சேகரிக்கப்பட்டு வருகிறது. இவைதான் எல்லாவற்றிற்கும் மூல காரணமாக அமைகின்றன. இதனை நாம் இனி பிரபஞ்ச பேரறிவு – Cosmic Consciousness என்று அழைப்போம்
கார்ல் யங்
இந்த பிரபஞ்ச பரிணாமத்தை கணக்கில் கொண்டால், எல்லாவற்றிற்கும் காரணமான முழு முதற்பொருள் அதாவது பரம்பொருளானது தானே தன் நுண்ணறிவைக் கொண்டு பலவாக வெளிப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கலாம். அல்லவா?
சரி உங்களுக்கு ஒரு கேள்வி.
நாம் தனித் தனியாக இயங்கிக் கொண்டிருக்கிறோமா? அதாவது நாம் பிரபஞ்சத்தில் இருந்து தனியாக இருக்கிறோமா? அல்லது ஒன்றாக இருக்கிறோமா? ஒன்றாக இருக்கிறோம் என்றால் எப்படி என்று சொல்ல முடியுமா?
உங்களுக்கு க்ளூ வேண்டுமானால் தருகிறேன். 5000 வருடங்களுக்கு முன் இயற்றப்பட்ட இந்த சாந்தி மந்திரம் சொல்வதை முழுமையாக கவனியுங்கள்
ஓம் பூர்ணமிதம் பூர்ணமதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணாஸ்ய பூர்ண்மாதாத்ய பூர்ணமேவாவஷிச்யயே
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
அதாவது அர்த்தம் வேண்டுமானால். முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்பும் முழுமையே நிலைத்திருக்கிறது. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?
நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!