“ஒரு மனிதன் புறத்தில் இருந்து யாராலும் தோற்பிக்கப்படுவதில்லை. ஒருவன் தோற்கிறான் என்றால் அது அவனால் மட்டுமே இருக்கும்”, என்று ஒரு அறிஞர் சொன்னதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். எதிரிகளை தோற்கடிப்பது எப்படி என்று ஒருவன் கற்றுக் கொள்வதை விட தன்னிடம் இருந்து தான் எப்படி விடுபடுவது என்றுதான் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் வாழ்வில் தோல்விகள் ஏற்படுகின்றதென்றால் அதற்கு அவன் மனம் அனுமதித்தால் மட்டுமே முடியும்.
இந்த உலகில் மனிதர்களை மூன்று வகைப்படுத்தலாம். “செய்யமுடியும், செய்வேன்” என்ற வகையினர், “செய்ய முடியும் ஆனால் மாட்டேன்” என்ற வகையினர் என்ற இருவகையை தாண்டி நாம் கவனம் கொள்ள வேண்டியது இந்த மூன்றாவது வகையினரைத் தான். “என்னால் செய்ய இயலாது. நான் செய்ய மாட்டேன்” என்று தனக்குத்தானே தன் மனதில் ஆழமாக ஒரு விதையை விதைத்து அதனை வேரூன்ற செய்து எல்லாவற்றிற்கும் எதிர்பதம் பேசிக் கொண்டிருக்கும் வகையினர் தான் அவர்கள். அவர்களுக்கு அவர்களே தடையாக இருந்து அவர்களது உண்மையான இயல்பில் இருந்து செய்யக் கூடியதை கூட செய்யாதவர்கள் அவர்கள். இந்த ஒரு மன நிலைக்கு எப்படி இவர்கள் தள்ளப்படுகிறார்கள் என்று பார்த்தால் ஒரு நான்கு விஷயங்களை நம்மால் பட்டியலிட முடியும்.
எப்போதும் தோல்வியையே எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது.
இவர்களை நாம் தினசரி எப்போதும் எங்கேயும் பார்க்கலாம். உதாரணத்திற்கு வீட்டில் ஒரு புதிய சமையலை சமைக்கும் அந்த இல்லத்தரசி, அதனை தன் குடும்பத்துக்கு பரிமாறும் நேரத்தில் “இது ஒரு புது டிஷ். சாப்பிட்டுவிட்டு நல்லா இல்லைன்னா திட்டாதிங்க” என்கிறார் என்று வைத்துக் கொள்வோமே. அவர் பல நேரங்களிலும் தோல்வியை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். பாவம் வீட்டுக்காரர்கள். முழு கான்ஃபிடன்ஸுடன் அவர்களால் அதை செய்யவே முடியாது. ஒருவித பயம் அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. நன்றாக படித்திருக்கும் ஒரு மாணவனோ மாணவியோ பரீட்சைக்கு செல்லும் போது ஒரு விதமான பதட்டத்துடன் போவது. தான் படித்த கேள்வி வருமோ வராதோ, தான் கண்டிப்பா ஃபெயில் தான் என்று நடுங்கிக் கொண்டே பரீட்சை ஹாலில் நுழைய வேண்டியது. இது இரண்டு சாம்பிள் தான். இப்படி எதையாவது ஒன்றை தேவையில்லாமல் நினைத்துக் கொண்டே தனது தோல்வியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பிரபஞ்சம் தவறாமல் தோல்வியை தரும்.
2. தான் எப்போதுமே தோல்விக்கென நேர்ந்து விட்டவர் என்று நினைத்துக் கொள்வது
தமக்கு தோல்வி வரும் என்று மட்டும் நின்றுவிடாமல், தம் வாழ்க்கையில் தாமே ஒரு தோல்வி என்று நினைக்கும் மனிதர்களை என்னவென்று சொல்வது. பல வெற்றியாளர்களின் கதைகளும் திரைக்கு முன்னால் நடப்பதை மட்டுமே படம் பிடித்து காட்டுகின்றன. உண்மையில் அவர்கள் அதற்காக எத்தனை சிரமப்பட்டார்கள், எத்தனை முறை தோல்வி அடைந்தார்கள் என்று புத்தகத்தில் இருக்கும் சில வார்த்தைகள் உணர்ச்சிகரமாக சொல்வதில்லை. அப்படியென்றால் எல்லோரும் தோல்விகளை சகஜமாக எடுத்துக் கொள்ள பழகிக் கொள்வோம். தொட்டது எல்லாம் தோல்வி என நினைப்பவர்கள் தாமஸ் ஆல்வா எடிசன் ‘எலக்ட்ரிக் பல்பை’ கண்டுபிடிக்கும் முன் எத்தனை முறை தோற்றார் என்பதை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். அப்போது கூட அவர் “நான் பத்தாயிரம் முறை தோற்றதாக கருத வில்லை. மாறாக பத்தாயிரம் புதிய பாடங்களை கற்றுக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று சொன்னார். வாழ்வில் ஏற்ற தாழ்வுகளை பழகிக் கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் எல்லாமே தனக்கு ஒரு தோல்விதான் என்று முடிவினை ஈசியாக அடைந்து விடுகின்றனர். அந்த சிந்தனையை மீண்டும் மீண்டும் தனது மனதிற்குள் உருப்போடுகின்றனர். பிறகென்ன நினைத்தது நடக்கும்.
3. ரிஸ்க் எடுக்க யோசிப்பது
ஒரு கூட்டத்தினர் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு சேஃப் ஜோன் (Safe Zone) வைத்திருப்பார்கள். அந்த மையத்திற்குள் உட்கார்ந்து கொண்டு விட்டால் போதும் வாழ்க்கையில் பிரச்சினைகளே வராது என்று நினைக்கிறார்கள். வாழ்க்கையை குண்டுசட்டிக் குள்ளேயே குதிரை ஓட்டுவது போல ஓட்டுவது. இதுதான் நிம்மதியான வாழ்க்கையாம். ஆனால் உள்ளுக்குள்ளே பலவிதமான ஆசைகளும் நிறைவேறாத வெற்றாசைகளாகவே அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். சரித்திரத்தை திரும்பி பார்த்தோமேயானால் இன்று வெற்றியாளர்கள், சாதனையாளர்கள் என்று நாம் பார்க்கும் யாவரும் அந்த ஒரு குறுகிய வட்டத்தை உடைத்து தகர்த்தெறிந்து வந்தவர்களாகவே இருப்பார்கள். ஏதாவது ஒரு விதத்தில், ஒரு இடத்தில் ரிஸ்க் எடுத்தவர்களாகவே இருந்திருப்பார்கள். ஒரு வேளை ரைட் சகோதரர்கள் தான் நிர்மாணித்த அந்த அட்டை விமானத்தின் சோதனை ஓட்டத்திற்கு பயந்திருந்தால் இன்று பல தேசங்களும் கண்டங்களும் கடக்கும் விமானங்கள் கிடைத்திருக்குமா என்று தெரியாது. அன்று அவர்கள் அந்த ரிஸ்க் எடுக்கவில்லையென்றால் ஏன் இன்று கிரகங்கள் தாண்டும் ராக்கெட் அமைந்திருக்காது. ஆனால் “என்ன நடக்குமோ” என்று பயந்து ரிஸ்க் எடுக்க தவறினால் குண்டு சட்டி மட்டும் தான் மிஞ்சும்.
4. தோல்வி தம்மை தோற்கடிக்க விட்டுக் கொடுப்பது
இனி வாழ்க்கையில் ஒன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்தவர். அவ்வளவுதான் முடிந்தது என்று நினைப்பவர் ஏதோ கசாப்புக் கடைக்காரனிடம் குனியும் ஆட்டை போல குனிந்து கொடுத்து விடுவது ஏற்கனவே வெட்ட தயாராக இருக்கும் கசாப்பு கடைக்காரனுக்கு மகிழ்ச்சியைதான் ஏற்படுத்தும். என் மீது எல்லா அம்புகளும் பாயட்டும் என்று நினைத்தால் எங்கிருந்து அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வது.
தோல்விகளை குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு மிகப்பெரிய உண்மை இருக்கிறது. அது என்னவென்றால். இவ்வுலகில் யாவர்க்கும் தோல்வி என்பது சாஸ்வதமான ஒன்று தான். கண்டிப்பாக ஏதெனும் ஒரு தருணத்தில், ஏதேனும் ஒரு சூழ்நிலையில், ஏதேனும் ஒரு காரணத்துக்காக ஒவ்வொருவருக்கும் தோல்வி வந்தே தீரும். ஆனால் அதிலிருந்து மீண்டு எழுந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து செல்வதே வாழ்க்கையின் வெற்றி எனப்படுகிறது. மேற்கண்ட இந்த நான்கு மனநிலைகளில் நீங்கள் இருக்கலாம். ஆனால் நினைவிருக்கட்டும் வெற்றியடைந்தவர் எல்லோரும் இந்த கட்டங்களை கடந்து வந்தவர்களே. சில சமயம் இந்த தோல்விக்கு முழு காரணம் நீங்களாக இருக்க மாட்டீர்கள். ஆனால் அதை ஒப்புக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகராமல் ‘நான் வீழ்ந்துவிட்டேன்’ என்று நீங்கள் நினைக்கும் போது மட்டும் தான் நூறு சதவிகிதம் தோல்வி அடைகிறீர்கள்.
நினைவிருக்கட்டும்
“வெற்றி என்பது விழாமல் இருப்பதல்ல. விழுந்த ஒவ்வொரு முறையும் கம்பீரமாக எழுவதே”
நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!