“அதிகாலைப் பொழுதை வென்றுவிட்டால், அகிலத்தை ஆண்டு விடலாம்,” என்பது அறிஞர்கள் வாக்கு. தூக்கம் என்று வரும் போதே எல்லோருக்கும் இத்தனை மணிநேரம் தூங்க வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கும். ஒருவர் எட்டு மணிநேரமாவது தூங்க வேண்டும் என்று ஒரு சாரார் சொல்வார்கள். மற்றொரு சாரார் 6 மணி நேரம் தூக்கம் இருந்தால் போதும் என்பார்கள். சிலர் இரவு 2 மணி வரை கூட எழுந்திருப்பார்கள், காலை 8 மணி முதல் 10 மணி வரை கூட தூங்குவார்கள். சிலர் இரவில் தாமதமாக படுத்தாலும் கண்டிப்பாக அதிகாலையில் விழிக்க வேண்டுமே என்று 5 அல்லது 6 மணிக்கே விழித்துக் கொள்வார்கள். இந்திரா காந்தி, விவேகானந்தர் எல்லோரும் தினமும் நான்கு மணிநேரம் மட்டுமே உறங்கிய பழக்கம் கொண்டவர்கள். ஆனால் அதைக் காரணமாகக் கொண்டு எல்லோராலும் 4 மணி நேரம் மட்டுமே தூங்கி எழ முடியாது. தூக்கம் சரியாக அமையாவிட்டால் அன்றைய நாளே பாழாகிவிடும். நல்ல எனர்ஜெட்டிக் நாள்பொழுதிற்கு நல்ல உறக்கம் கண்டிப்பாக தேவை. ஆனால் நிலைமை இன்று தலைகீழாக இருக்கிறது. யாரும் சரியாக தூங்குவதே இல்லை. வேலைப்பளு வேறு. இன்சோம்னியாவால் பாதிக்கப்பட்டவர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருப்பதாக சர்வே ஒன்று சொல்கிறது.
- உடல் ஆரோக்கியத்தைக் குறித்து பேசும் எந்தவொரு விற்பன்னரும் “எத்தனை மணிநேரம் தூங்க வேண்டும்?”, என்ற கேள்விக்கு சொல்லக்கூடிய ஒரே பதில், “இதற்கு மந்திர எண்கள் என்று ஒன்றுமே இல்லை”.
- உறக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒவ்வொருவரின் உடல் பாகு, வயது, ஆரோக்கிய நிலை, பாரம்பர்யம், உடல்பயிற்சி என்று பல விஷயங்களை மையமாக வைத்தே உறக்கத்தின் நேரம் மற்றும் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. உங்களுக்கு நல்ல உறக்கம் என்பது எட்டு மணிநேரம் தேவைப்படுகிறது என்றால் வேறு ஒருவருக்கு நான்கு மணிநேரம் மட்டுமே போதுமானது.
- அமெரிக்காவின் “நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன்” தமது ஆராய்ச்சியில் 9 மணிநேரத்திற்கும் மேல் அதிக காலத்துக்கு தூங்குபவர்கள் எளிதில் பல நோய்களுக்கு ஆளாகின்றனர் என்று கண்டுபிடித்துள்ளனர்.
- மேலும் அந்த ஆராய்ச்சி சரியான உறக்கமின்மையே பலவிதமான மன அழுத்த நோய்களுக்கு காரணமாக அமைகின்றது என்றும் கண்டுபிடித்திருக்கிறது.
இதையெல்லாம் தவிர்க்க என்ன செய்யலாம். தூக்கத்தை நெறிப்படுத்த வேண்டும். அவ்வளவுதான் பகல் பொழுதை ஆற்றல்மிக்கதாக்கிக் கொள்ள வேண்டும். எப்படி? இதோ கீழ்காணும் தகவல்கள் உங்களுக்காக:
- மிராக்கிள் மார்னிங் எனும் புத்தகத்தில் பல பேரின் அனுபவங்களை கேட்டுணர்ந்த ஆசிரியர் நமது உறக்க பழக்க வழக்கம் பெரிதும் நம் மனதின் நம்பிக்கைகளை பொறுத்தே அமைகிறது என்கிறார். நமது உடலின் அனைத்து பாகங்களும் மூளைக்கு கட்டுப்படுகின்றன இது நமக்கு தெரியும். இப்போது அந்த மூளையை கட்டுப்படுத்துவது எது? எண்ணங்கள், அல்லவா? “என்னால் அதிகாலையில் எல்லாம் எழுந்திருக்க முடியாது” என்று மனம் நினைத்து விட்டால், அந்த நபரால் நிச்சயமாக அதிகாலையில் எழுந்திருக்கவே முடியாது. இந்த உடல்-மனம் தொடர்பு என்பது அத்தனை அழுத்தமானது, ஆற்றல்மிக்கது. இதனாலேயே உறக்கத்தை நெறிப்படுத்த நாம் எடுக்கவேண்டிய முதல் நடவடிக்கை நமது வாழ்க்கைக்கு நாமே முழு பொறுப்பேற்க வேண்டியது. நாளை எப்போதும் மற்றவரால் தான் என் வாழ்க்கை கெட்டது என்று சொல்லவே கூடாது.
- உறங்கும் முன் மனதை முழுவதுமாக தளர்த்திக் கொள்வது மிக நல்லது. இரவு கண்மூடும் வரை ஸ்மார்ட்ஃபோன்களை நோண்டிக் கொண்டிருப்பது, வாட்ஸாப் ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டிருப்பதை எல்லாம் விட்டுவிட்டு, உறங்குவதற்கு தயாராக இனிமையான இசை கேட்பது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
- உறங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னால், நமது விருப்பங்களுக்கான சுயப்பிரகடனங்களை சொல்வதுடன், அந்த சுயப்பிரகடன வாக்கியங்களுடன், “இன்றைய இனிமையான நாளுக்கு நன்றி. இப்போது நான் நன்றாக ஆழ்ந்து உறங்கி, அதிகாலையில் மிகுந்த ஆற்றலுடன் விழிப்பேன். அந்த ஆற்றல் என்னை பகல் பொழுதில் அனைத்து காரியங்களையும் சிறப்பாக நடத்தி முடிக்க உதவும்” என்று இணைத்து சொல்லப் பழகிக் கொள்ளுங்கள்.
- வேண்டுமானால் எத்தனை மணிக்கு எழுந்திருக்கப் போகிறீர்கள், எத்தனை மணி நேரம் உறங்க போகிறீர்கள் என்பதையும் உடன் இணைத்துக் கொள்ளலாம். “என் உடல் தன்னை சீர்படுத்திக் கொள்வதற்காக இந்த உறக்கப்பொழுதை பயன்படுத்திக் கொள்கிறது. இந்த நேரம் மிகவும் அற்புதங்கள் நிகழக் கூடிய தருணம். என் உடலின் அனைத்து செல்களும் சீரமைத்து சக்தியூட்டப்படும் நேரம் அது. எனக்குத் தேவைப்படுவது எல்லாம் ஐந்து/ஆறு மணி நேர உறக்கம்தான். அதன்பின் என் உடல் முழு ஆற்றலையும் பெற்று முழு பொலிவுடன் நான் விழிப்பேன்,” என்று இணைத்துக் கொள்ளலாம்.
- இப்படி செய்வதால் மனதிற்கு எத்தனை மணி நேரம் உறக்கம் தேவைப்படுகிறது என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதனால் என்ன நடக்கும் என்ற நம்பிக்கையூட்டப்படுகிறது. அது எத்தனை மணி நேர தூக்கமாக இருந்தாலும் சரி புத்துணர்ச்சியுடன் காலையில் விழிக்க உதவுகிறது. அதே சக்தியோட்டம் நாள் முழுதும் தொடர்ந்து இருக்க உதவுகிறது.
- அதே போல அடுத்த நாள் நாம் செய்யவிருக்கும் நமக்கு புத்துணர்ச்சி தருமொரு சில நல்ல விஷயங்களை நாம் உறங்கும் முன் நினைவில் கொள்ளலாம். நன்றாக யோசிப்போம். எல்லா நாளும் நாம் உறங்குவதற்கும் பண்டிகைக் காலங்களில் நாம் உறங்குவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். குறிப்பாக நமது சிறுவயதில் பொங்கல், தீபாவளி வந்து விட்டால், ஐந்து மணிக்கோ அல்லது அதற்கு முன்னரே எழுந்திருப்பதோ நமக்கு கஷ்டமாக இருந்திருக்காது. காரணம் மறுநாள் நமக்காக காத்திருக்கும் மகிழ்ச்சியான தருணங்களை எண்ணி மனம் குதூகலித்துக் கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் இதே போல அமைந்து விட்டால், எவ்வளவு ஆற்றல் மிக்க செயல்களை நம்மால் செய்ய முடியும் பாருங்கள்.
மேற்காணும் முறைகளை கடைப்பிடிக்கும் போது உறக்கத்தின் கால அளவு என்பது ஒரு பொருட்டாகவே இருக்காது. மாறாக சிறிது நேர உறக்கமாயினும் நல்ல தரமான ஆழ்ந்த உறக்கமாக அமையும். மறுநாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் இருந்து பல வேலைகளை முடிக்க காரணமாகவும் அமையும்.
நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!