உங்களுக்குத் தெரியுமா. உங்களுடைய வாழ்க்கையில் பத்து சதமானமே உங்களுக்கு நேர்வது. மீதமுள்ள தொண்ணூறு சதமானம் நீங்கள் அதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து அமைகிறது. உண்மையில் நமக்கு என்ன நேர்கிறது என்பது நம் கையில் இல்லை. வாழ்க்கையின் நிதர்சனமான உண்மைகளில் நிச்சயமற்ற தன்மையும் ஒன்று. எது வேண்டுமானாலும் எந்த நேரம் வேண்டுமானாலும் நடக்கலாம். நமக்கு நேரும் ஒன்று எப்போதும் புறம் சார்ந்ததாகவே இருக்கும். அது நம் கையில் இல்லை. காலையில் எழுந்ததும் வேலைக்கு செல்ல கிளம்பும் நேரத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக வழியில் டிராஃபிக் ஜாம் ஆகிவிட்டால் நாம் எரிச்சல்படுகிறோம். ஆனால் அதற்கு காரணகர்த்தா நாம் அல்லவே? வெளியே செல்ல வண்டியை எடுக்கும் போது டயர் பஞ்சர் ஆகியிருந்தாலோ? நிச்சயமற்ற தன்மையின் வினைகள் இவைகள்.
“நான் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன் சார். எவ்வளவு கரெக்டா இருந்தும் எல்லாம் தப்பாவே போகுது சார். ஏதாவது வழி சொல்லுங்க”, என்று கேட்பார்கள் என்னிடம்.
“வாழ்க்கையில் எல்லாமே சரியா நடக்குதுன்னா, வாழ்க்கை ஏதோ தப்பான பாதையில் போய்க்கொண்டிருக்கிறதுன்னு அர்த்தம்”, என்பேன் நான்.
அதுதான் உண்மையும் கூட. இருமைகள் நிறைந்த வாழ்க்கையில் நல்லது மட்டுமே வேண்டும் என்பது எவ்வளாவு மோசமான சுயநலம். “எனக்கு என் வாழ்வில் எதிர்மறைகளே இருக்கக்கூடாது,” என்று சொல்பவர்களின் அறியாமையையும் முட்டாள்தனத்தையும் எண்ணி எத்தனையோ முறை வருத்தப்பட்டிருக்கிறேன். புறத்தால் எழும் சூழ்நிலைகள் யாவும் நம்மால் முழுமையாக கட்டுப்படுத்தமுடியாதது . ஆனால் அந்த சூழ்நிலைகளை எதிர்கொண்டு அவற்றை நமக்கு சாதகமாக்கிக் கொள்வது என்பது நமக்கு சாத்தியமே. முதலாமவது ஏற்கனவே சொன்னது போல பத்து சதவீதம் மட்டுமே. ஆனால் அதற்கடுத்து நாம் எடுக்கும் முடிவுகள், நாம் செயல்படும் விதங்கள், அந்த சவால்களை நாம் எதிர்கொள்ளும் விதங்கள், நம்முடைய எதிரியக்கம் இவையெல்லாமே அடுத்த தொண்ணூறு சதவீதத்தையும் பிடித்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நம்மை இட்டு செல்கிறது.
காலையில் ஆஃபீஸிற்கு கிளம்பியது வரை ஒன்றும் நமக்கு பிரச்சினையில்லை. ஆனால் வழியில் ஏதோ அறியாத காரணத்துக்காக ஏற்பட்ட டிராபிக் ஜாம் நம்மை டென்சனுக்கு உள்ளாக்குகிறது. லேட்டாகி விடுமே என்று கவலைக் கொள்ள வைக்கிறது. மேனேஜர் என்ன சொல்வாரோ என்று பயமுறுத்துகிறது. இவை எல்லாம் நினைத்தது போலவே நடப்பது ஒரு புறமிருக்கட்டும். இதற்காக இங்கிருந்தே நமது மனத்தை இறுக்கத்திற்கு உள்ளாக்குவது தொடர் சங்கிலியாக எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும். நீங்கள் டிராஃபிக்கில் நின்று கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு நல்ல விஷயத்தை சொல்ல உங்கள் மனைவி உங்களுக்கு ஃபோன் செய்யலாம். “இந்த நேரத்தில் இவளுடைய ஃபோன் வேறே” என்று எரிச்சலுடன் அவர் அழைப்பை ஏற்று நீங்கள் எரிந்து விழுவீர்கள்.
டிராஃபிக்கை தாண்டி அலுவலகம் வந்து அடைந்தவுடன் உங்கள் ஹெல்மட்டை மறந்து பூட்டாமல் வந்து விடலாம். அலுவலக வாட்ச்மேனின் சல்யூட்டை எப்போதும் புன்னகையுடன் எதிர்கொள்ளும் நீங்கள் இன்று வேண்டாவெறுப்பாக கண்டும் காணாமல் கடந்து சென்று விடுவீர்கள். இவரா இப்படி என்று அந்த வாட்ச்மேன் யோசித்து நடையை கட்டுவார். உங்களது டென்ஷனில் பக்கத்து ஒர்க்ஸ்டேஷனில் இருப்பவர்களை காணக்கூட மறுத்துவிடுவீர்கள். நீங்கள் நினைத்தது போலவே உங்களது அலுவலக அட்டவணையில் நீங்கள் நேரம் தாழ்த்தி வந்தமைக்கு உங்களுக்கு கோடு போடப் பட்டிருக்கும். அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாக உங்கள் மேனேஜர் உங்களை அழைப்பதாக ஆஃபீஸ் அசிஸ்டண்ட் வந்து சொல்லிவிட்டு போவார். காலையில் இருந்த டென்ஷன் தளர்வான நேரத்தில் இந்த புதிய குண்டு புதிய பூகம்பத்தை உங்கள் மூளையில் ஏற்படுத்தும். வேர்க்க விருவிருக்க மானேஜர் கேபினுக்குள் போகும் போதுதான் ஞாபகம் வரும் இன்று ஒரு முக்கியமான அசைன்மெண்ட்டை அவரிடம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது என்றும் அதற்காகத்தான் அவர் அழைத்திருக்கிறார் என்றும், ஆனால் காலையில் இருந்து வந்த டென்ஷனில் இந்த வேலையை நீங்கள் முற்றிலும் மறந்து விட்டீர்கள் என்றும் புரியவரும். அடுத்தது என்ன, அவர் அசைன்மெண்ட்டிற்காகத்தான் கூப்பிட்டார். ஆனால் நீங்கள் எதிர்பார்த்தபடியே உங்களுடைய காலதாமதமும் அவருக்கு இப்போது தெரியவர அதற்கும் உங்களுக்கு சரியான டோஸ்தான்.
இப்படி ஒரு சூழ்நிலை எதனால் ஏற்பட்டது? கொஞ்சம் நிதானமாக இதை கவனித்தோமேயானால் நமக்கு அந்த உண்மை புரியவரும். அதாவது வரும் வழியில் டிராஃபிக் ஏற்படுவது என்பது நமக்கு எதேச்சையாக நேருவது. ஆனால் அதற்கு பின் வருவான் எல்லாம் நாமே நமக்கு வைத்துக் கொள்ளும் ஆப்பு போன்றது. நாம் அதற்கு சரியான ரீதியில் எதிர்வினை ஆற்றியிருந்தால் இவ்வளவும் நடந்திருக்காது.
அதாவது இப்படி யோசித்து பார்ப்போம். நீங்கள் நல்ல டிராஃபிக்கில் மாட்டிக் கொண்டீர்கள். இப்போது சிறிது மனத்தில் அலுவலக நடைமுறைகளைக் குறித்துக் கவலை இருந்தாலும், நிதானமாக வண்டியை ஓரங்கட்டி உடனடியாக உங்கள் மேலாளருக்கு ஒரு ஃபோன் செய்து, “சார், வரும் வழியில் நல்ல டிராஃபிக் ஜாம் சார். நான் எப்போதும் போல சீக்கிரமே கிளம்பி விட்டேன். ஆனால் துரதிருஷ்தவசமாக இங்கே வந்து மாட்டிக் கொண்டேன். கொஞ்சம் பெர்மிஷன் கொடுங்க சார்,” என்று சொல்லுகிறீர்கள்.
அவரும் உடனே,”அடடா அப்படியா? பரவாயில்லை. இந்த சிட்டி டிராஃபிக் பத்தி எனக்கு தெரியாதா. நிதானமா வாங்க. அப்புறம் வந்ததும் அந்த அசைன்மெண்ட்டை உங்களால எவ்வளவு சீக்கிரம் முடிச்சு குடுக்கமுடியுமோ முடிச்சுட்டு என் கேபினுக்கு வாங்க ப்ளீஸ்”, என்று பதிலளிக்கிறார். உங்களுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு.
இந்த அழைப்பை கட் செய்த சிறிது நேரத்தில் உங்கள் வீட்டிலிருந்து அழைப்பு. டிராஃபிக் இன்னமும் மெல்ல ஊர்ந்து நகர, மீண்டும் சிறிது தூரத்தில் வண்டியை ஓரங்கட்டி, “என்னம்மா, வண்டில போய்ட்டு இருக்கேன். ஒரே டிராஃபிக் இருக்கு எதாவது அவசர தகவலா?” என்று கேட்கிறீர்கள்.
“அச்சோ அப்படியா. ஒண்ணும் இல்லை. நம்ம பாப்பாவுக்கு ஸ்கூல்ல ஏதோ கட்டுரை போட்டில வின் பண்ணி ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கிருக்காளாம். அப்பா அம்மாவோட வந்து ஸ்கூல் ஃபன்க்ஷன்ல ப்ரைஸ் வாங்கிக்க சொல்லிருக்காங்களாம். அப்பாகிட்ட கண்டிப்பா உடனே சொல்லிடும்மான்னு சொன்னா. அதான் சந்தோஷத்துல கூப்பிட்டேன்”, என்கிறார் உங்கள் மனைவி.
உங்களுக்கு தலையிலிருந்து கால் பாதம் வரை பெருமிதம். நீங்கள் பெற்ற மகள் முதல் பரிசு வாங்கியிருக்கிறாள் என்று. துண்டிக்கப்படாத அலைபேசியில் மனைவி,” ஏங்க நீங்க பாத்து பொறுமையா போங்க. லேட்டாகிடுச்சேன்னு டென்ஷன் ஆகாதீங்க. சரியா?”, என்று அன்புடன் சொல்ல உங்களுக்கு இருந்த டென்ஷன் எல்லாம்போயே போய் விடுகிறது.
அப்புறம் என்ன அலுவலகத்தில் நுழையும் போது வாட்ச்மேனிடம் அதே புன்முறுவல். அவரோ, “சார். என்ன சார், டிராஃபிக் ஜாமா? மேனேஜர் சார் சொன்னாரு. நீங்க போய் டேபிள்ல உக்காருங்க நான் ஆஃபீஸ் பாய் கிட்ட காஃபி ஒண்ணு வாங்கி குடுத்து விடறேன்,” என்று சொல்ல இதை விட நல்ல வாழ்க்கை வேண்டுமா என்று உங்கள் மனம் குதூகலிக்க தொடங்கிவிடும்.
இவை அத்தனைக்கும் முழு முதற்காரணம் நீங்களே. உங்கள் நிதானமான அந்த முதல் எதிர்வினையே. இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. இப்படி கேட்பதுதான் அந்த கெட்ட எதிர்வினையின் தொடக்கம் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்.
முதலில் நாம் பார்த்ததிலும் உங்கள் சிந்தனையும் செயலும் தான் உங்களுக்கு எல்லா எதிர்வினைகளையும் பெற்று தந்தது. இரண்டாம் உதாரணத்திலும் நீங்கள் தான் உங்கள் அனைத்து நல்வினைகளுக்கும் காரணமாக இருக்கிறீர்கள் என்பதை நன்றாக கவனியுங்கள்.
நாம் மேற்கண்டது ஒரு உதாரணமே. நம் வாழ்வில் எல்லா விஷயங்களிலும் நாம் தான் நமக்கு மேற்கொண்டு நடைபெறும் 90 சதவிகிதம் விஷயங்களுக்கு பொறுப்பாக இருக்கிறோம். நமக்கு நேரும் பத்து சதவிகித புறம் சார்ந்த எதிர்பாரா நிகழ்வுகளை நல்லதாகவோ கெட்டதாகவோ மாற்ற நம்மால் மட்டுமே முடியும். நிதானமாக எந்தவிதமான முன் அபிப்ராயங்களும் இல்லாமல் வருவதை எதிர்கொண்டு சரியாக செயல்பட்டால் மட்டுமே போதுமானது. யாவும் நலமாகும்.
நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!