நாம் அனுதினமும் பல எதிர்மறை விஷயங்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அது நம் எண்ணங்களில் பலவிதமாக பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது. எப்போது எதிர்மறைகள் நமது சிந்தனைக்குள் நுழைகிறதோ அப்போதே நாம் மூட்-ஆஃப் ஆகி விடுகிறோம். நமது கான்ஃபிடென்ஸ் குறைந்து விடுகிறது. பல நேரங்களிலும் வாழ்க்கையே இருண்டு விட்டது போல தோன்ற ஆரம்பித்து விடுகிறது. இனி இப்படித்தான் என் வாழ்க்கை இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு எதிர்மறை எண்ணங்கள் நம் மொத்த வாழ்க்கையின் தீர்க்கதரிசனங்களாகவே மாறிப்போகின்றன. நாம் வாழ்க்கை அளிக்கும் பல நல்ல விஷயங்களுக்கும் தகுதியற்றவர்கள் என்ற தோற்றத்தையும் அது தானே ஏற்படுத்தி விடுகிறது. என்னதான் முரண்டு பிடித்தாலும் எதிர்மறைகள் நம்மை பிடித்து கீழே தள்ளிவிட்டு விடுகின்றன. எதிர்மறைகளின் இந்த பிடிப்பு நம் ஆழ்மனத்தை ஆக்கிரமித்து வாழ்க்கையை துவம்சம் செய்து விடுகின்றன. எதிர்மறைகளின் இந்த தாக்கத்திலிருந்து விடுபட நாம் நம் சிந்தனைகள், வார்த்தைகள், மனக்காட்சிகள் என்று எல்லாவற்றிலும் நேர்மையை கொண்டு நிரப்ப வேண்டியதாகிப் போகிறது. குறிப்பாக நமது நேர்மறை சுயப்பிரகடனங்களை கவனமாக நிர்மானிக்க வேண்டி இருக்கிறது. உங்களுக்காக நீங்கள் உருவாக்கும் சுயப்பிரகடனங்கள் உங்களுக்கு பலன் தர வேண்டுமானால் நீங்கள் கீழ்காணும் 5 விஷயங்களை கவனமாக உங்கள் சுயப்பிரகடனங்களில் கையாண்டிருக்கிறீர்களா என்று கவனியுங்கள்.
எதை மாற்ற வேண்டும்?
எல்லோருக்கும் வாழ்க்கையில் மாற்ற வேண்டும் என்று ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கும். அதை உங்கள் சுயப்பிரகடன வாக்கியம் உறுதிப்படுத்துகிறதா என்பதை கவனியுங்கள். உதாரணத்திற்கு அதிகாலை எழும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள விருப்பப்படுபவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை ஒரு சுயப்பிரகடனமாக எழுதும் போது “ நான் அதிகாலை விழித்தெழ வேண்டும்” என்று நீங்கள் எழுதுவது உங்கள் கவனம் “நீங்கள் இப்போதெல்லாம் அதிகாலை எழுவதில்லை என்ற விஷயத்திலேயே உங்கள் கவனத்தின் ஆற்றல் செல்வதை காண்பிக்கிறது. அதாவது நான் இப்போதெல்லாம் அதிகாலை எழுந்திருப்பதில்லை. ஆனால் அது நன்றாக இருக்கும் என்று எனக்குத் தெரிகிறது. அதனால் நான் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்று சொல்வதாக அமைகிறது. உங்கள் கவனத்தின் ஆற்றல் எங்கு செல்கிறதோ அதுதான் மனதில் பதியும். அதற்கு பதில் உங்களுக்கு தேவையான மாற்றத்தில் இருக்கும் நன்மைகளில் உங்கள் கவனத்தின் ஆற்றல் செல்வது போல மாற்றிப் பாருங்கள். உடனடியாக உங்கள் மனதில் அது பதிந்து நிஜத்தில் நடக்கவும் தொடங்கும். இதே உதாரணத்தில் “அதிகாலைப் பொழுதுகள் ஆற்றல் மிக்கவையாக எனக்கு அமைகின்றன. அதிகாலை விழித்தெழுவதால் நான் அதிக சக்தி பெறுகிறேன். அதிகாலை எழுவதால் எனது நாள் முழுவதும் சிறப்பாக அமைவதை உணர்கிறேன்” என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் உணர்வுகள் பொங்க நீங்கள் அதன் வசப்பட்டிருப்பீர்கள்.
உங்கள் விருப்பங்கள் அடையக்கூடியதுதானா?
இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் கேட்டுப் பெற முடியும் என்பது உண்மைதான். ஆனால் நாம் உண்மையில் பிரபஞ்சத்தின் வடிவமைப்பை புரிந்து கொண்டோமென்றால், நீங்கள் எதை வேண்டுமென்றாலும் கேட்டுப் பெறுவதற்கு ஒரு சிறிய ட்விஸ்ட் இருப்பதை உங்களால் உணர முடியும். உங்கள் மனம் தான் அந்த ட்விஸ்ட். நீங்கள் விரும்புவது எதுவும் கிடைக்கும் என்கிற முழு நம்பிக்கையும் அதற்கு வரும் வரை அது ஆயாசமாகத் தான் இருக்கும். அது முழுமையாக நம்பும் வரை நீங்கள் விரும்பியதை அடைய சிரமம் இருக்கலாம். அதனால் தான் ஆரம்பகாலங்களில் உங்கள் மனம் அடையக்கூடியது என்று நம்பக்கூடிய சிறிய விஷயங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்று சொல்கிறோம். Realistic என்று சொல்கிறோமே, அது போல உங்கள் விருப்பங்கள் இருக்க வேண்டும். எதை அடைய முடியும் என்று மனம் ஒரு சிறு சஞ்சலம் கூட இல்லாமல் நினைக்கிறதோ அதனை மட்டுமே உங்கள் விருப்பங்களாகவும் சுயப்பிரகடனங்களிலும் வெளிப்படுத்துங்கள். ஒவ்வொரு சிறிய விருப்பத்தையும் நிறைவேற்றி வெற்றி பெறும் போது மனம் தானே பழக்கப்பட்டு பெரிய விஷயங்களும் அடையக்கூடியதுதான் என்ற நம்பிக்கைக்கு வந்து விடும். பொறுமை மிக முக்கியம் இங்கே.
எதிர்மறைகளை நேர்மறைகளாக மாற்ற வேண்டும்
நாம் வெளிக்காட்டும் குணங்களுக்கு நிச்சயமாக பெரும் பங்கு நம் சுயபேச்சுக்கு உண்டு. அதாவது நமக்கு நாமே பேசிக் கொள்ளும், நினைத்து கொள்ளும் விஷயங்கள் எல்லாமே சுயபேச்சு எனும் வரையறைக்குள் வந்து விடும். இப்போது உங்கள் சுயப்பிரகடனங்களை எழுதும் முன் உங்கள் சுயபேச்சை கவனியுங்கள். உங்களுக்கு நீங்களே உங்கள் விருப்பத்திற்கு மாறான எதிர்மறையான என்னவெல்லாம் சொல்லிக் கொள்கிறீர்கள் என்று கவனியுங்கள். முடிந்தால் கையில் ஒரு கையேடு வைத்துக் கொண்டு உங்கள் எதிர்மறை சுயபேச்சுக்களை குறிப்பெடுங்கள். உதாரணத்திற்கு உங்கள் பணம் சம்பாதித்தல் குறித்த சுயபேச்சு இப்படி இருக்கலாம் “நான் மிடில் க்ளாசை சேர்ந்தவன். என்னால் கோடிகளெல்லாம் சம்பாதிக்க முடியாது”. இது எப்போதும் வரும் ஒரு எண்ண வெளிபாடாக இருக்கலாம். ஆனால் இது தொடர்ச்சியாக ஏற்படும் போது உங்கள் மனதில் அது பதிவாகி அடுத்த கட்டத்திற்கு நீங்கள் நகர அதுவே ஒரு பெரிய முட்டுக் கட்டையாகி விடும். அதனை நீங்கள் “என் மனம் ஆற்றல் மிக்கது. அபரிமிதமான இந்த பிரபஞ்சத்தில் எனக்குத் தேவையான செல்வம் அளவுக்கதிகமாகவே உள்ளது. எனது மனத்தின் ஆற்றலால் நான் எத்தனை கோடியென்றாலும் சம்பாதிக்கும் தகுதி பெற்றவன்” என்று மாற்றி எழுதவும் சொல்லவும் பழகிக் கொள்ளுங்கள்.
உங்கள் சுயப்பிரகடனங்கள் நிகழ்காலத்தில் இருப்பதாய் அமைந்திருக்கின்றனவா?
நீங்கள் விருப்பப்பட்டது எல்லாம் கிடைக்க வேண்டுமென்றால், அவை அனைத்தும் உங்களுக்காய் காத்துக் கிடக்கின்றன என்ற எண்ணம் உங்கள் மனதில் ஆழப் பதிய வேண்டும். இப்படி வைத்துக் கொள்வோம், நீங்கள் மாத ஊதியத்திற்கு அடிபணிந்து வேலை செய்வது எதற்காக? கண்டிப்பாக மாதாமாதம் அந்த சம்பளமானது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதால் மட்டும் அல்லவா? அதே போல நீங்கள் எதை விரும்பினாலும் அது உங்களுக்கு கிடைத்துவிடுகிறது என்ற நம்பிக்கை உங்கள் மனதிற்கு ஏற்பட வேண்டும். அதற்கு நீங்கள் விருப்பப்பட்டது உங்களுக்காக ஏற்கனவே இந்த பிரபஞ்சத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது போல உங்கள் சுயப்பிரகடனத்தை நீங்கள் எழுத வேண்டும். “பெறுவேன்” என்று எழுதுவதை விட “பெற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று எழுதுவது சிறந்தது. “எனது விருப்பம் இப்பிரபஞ்சத்தில் உருப்பெற்றுக் கொண்டிருக்கிறது” என்று நீங்கள் எழுதலாம்.
உணர்ச்சிப்பட எழுதியிருக்கிறீர்களா?
உங்கள் சுயப்பிரகடனங்களின் சிறப்பம்சமே அந்த வார்த்தைகளின் ஆற்றலே. நீங்கள் “நான் ஆற்றல்மிக்கவன்” என்று சொல்லும் போது உங்கள் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை சில்லிட வேண்டும். ஆற்றல் தானாக மேலிட வேண்டும். உங்கள் சுயப்பிரகடனங்களை நீங்கள் சொல்லும் போது உணர்ச்சி தானாக பொங்க வேண்டும். இது உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதை துரிதப்படுத்தும். உங்கள் வார்த்தைகள் தரும் உணர்ச்சியானது உங்கள் மனக்காட்சிப்படைப்பிற்கு வலுவூட்டுகிறது. உங்கள் மனக்காட்சிப் படைப்பானது ஆற்றல் மிக்க உணர்வலைகளை பிரபஞ்சத்தில் செலுத்துகிறது. அந்த உணர்வலைகளானது உங்களுக்கு தேவையானதை பிரபஞ்சத்தில் இருந்து ஈர்த்து தருகிறது. எனவே நீங்கள் எழுதியிருக்கும் சுயப்பிரகடனங்களை ஒன்றுக்கு பலமுறை வாசித்து பாருங்கள். எங்காவது உணர்ச்சி குறைவாக காணப்படுகிறதென்றால் அதனை மாற்றுங்கள்.
உங்கள் சுயப்பிரகடனங்கள் என்பது எதிர்மறையால் ஆளப்பட்டிருக்கும் உங்கள் மனதை நேர்மறை திசையில் திருப்பி எதிர்மறையின் ஆதிக்கத்திலிருந்து உங்களை விடுவித்து நேர்மறை ஆற்றலை பெருக செய்து உங்கள் விருப்பங்களை யதார்த்தத்தில் உருவாக்கும் வல்லமை படைத்தவை. அவற்றை மேல்கண்ட ஐந்து அம்சங்கள் பெற்றிருக்கின்றனவா என்று ஆராய்ந்து உருவாக்கி உபயோகிக்க செய்தால் உங்கள் எண்ணங்கள் நிச்சயம் ஈடேறும் உங்கள் வாழ்க்கை நிச்சயம் மேம்படும்.
நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!