வாழ்க்கையில் லட்சியத்துடன் இரு, வெற்றியை நோக்கி ஓடு என்ற அறிவுரைகளை கேட்டு வளர்பவர்கள் தான் நாம். சமூகம் சொல்லும் விதிகளை, அதை நல்லதா கெட்டதா என்று கூட ஆராயாமல் அப்படியே செகண்ட் ஹேண்ட் மனிதர்களாக உள்வாங்கி வாழும் இயல்புடையவர்கள் நாம். நம் சுயசிந்தனையை எப்போதும் தூசு தட்டி வைப்பதற்கு கூட உபயோகப்படுத்தாமல் இருக்கும் குணமுடையவர்கள் நாம். இந்த குணங்கள் எல்லாம் எனக்கும் பொருந்தும். நான் அப்படித்தான் இருந்தேன். கிட்டதட்ட 2010ம் வருடம் வரை.
“காசு என்பது கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டும்”
“கஷ்டப்படாம வாழ்க்கையில எதுவும் அடைய முடியாது”
“வாழ்க்கையில் பணம்தான் எல்லாம்”
“நாமெல்லாம் மிட்ல் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவங்க. பெரிய விஷயங்களில் ஆசைப்பட்டு அகலக்கால் வைக்கக்கூடாது”
“ஏழைக்கேத்த எள்ளுருண்டைன்னு சொல்ற மாதிரி வாழணும்”
இப்படி பல வார்த்தைகளை பெற்றோர்கள் முதல் சுற்றத்தார் வரை சொல்லக் கேட்டுத்தான் நானும் வளர்ந்தேன். ஆனாலும் சிறுவயதில் எங்கேயோ எப்படியோ ஏற்பட்ட தாக்கம் “சாதிக்க வேண்டும்” என்ற எண்ணம் என் ஆழ்மனதில் வேரூன்றி விட்டிருந்தது. அதனால் நான் பட்ட கஷ்டங்கள் எத்தனை கட்டுரை எழுதி சொன்னாலும் மாளாது. ஆனால் இந்த கட்டுரை என் கதை மிகப்பெரிய சோகக்கதை என்று சொல்லி எல்லோரையும் சோகத்தை ஆழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படவில்லை. மாறாக ஒவ்வொரு முடிவிலும் ஒவ்வொரு ஆரம்பம் எப்போதும் உண்டு என்று சொல்லி இதை வாசிக்கும் அனைவரையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுகிறது.
எல்லோரையும் வசீகரித்த சினிமா துறை என்னையும் வசீகரித்தது. எல்லோரையும் போல நானும் அதில் பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை கருவாக கொண்டேன். காலத்தின் போக்கில் அந்த விதையின் கருவும் வளரத்தொடங்கியது. சினிமாத்துறைக்கு எளிதில் நுழைவுச்சீட்டு கிடைக்க வாய்ப்பளிக்கும் அனிமேஷன் மற்றும் கிராஃபிக்ஸ் துறையை தேர்ந்தெடுத்து அதில் பட்டயப் படிப்பும் வேலைவாய்ப்பும் பெற்று கிட்டதட்ட 15 வருட அனுபவம் பெற்ற பின்னர் 2010ம் ஆண்டு என்னுடைய சொந்த அனிமேஷன் ஸ்டூடியோ தொடங்கினேன். தொழில்நுட்பத்தில் இருந்த நான் கற்றறிந்த நுணுக்கம் தொழில் செய்வதில் தவறிவிட்டது. அதை கற்றறிய பிரபஞ்சம் எனும் இறைஆற்றல் எனக்கு கொடுத்த பாடம் மிகப் பெரியது. 2010ல் நான் தொடங்கிய அந்த தொழிலானது 2011 தொடக்கத்திலேயே சுருண்டு கொண்டது. ஆனால் இந்த குறுகிய காலத்திலேயே எனக்கு ஏற்பட்ட பொருள் நஷ்டம் சுமார் 48 லட்சம். இதன் காரணமாக ஏற்பட்ட பெரிய மன அழுத்தம் உயர் ரத்தக் கொதிப்பையும் அதன் பின்விளைவாக ஸ்ட்ரோக்கையும் 2011 ஏப்ரலில் வரவழைத்தது. ஸ்ட்ரோக்கின் பின்விளைவுகளாக தளர்ந்த எனது இடதுபக்கம் என்னை நடக்கவிடாமல் முடமாக்கியது. கிட்டதட்ட 9 மாதங்களுக்கும் மேலாக படுக்கையில் ஒரே அறையில் முடங்கிய நான் எனக்குள் எழுப்பிக் கொண்ட கேள்விகள் பல.
என் கேள்விகளுக்கு பதில் என்னுள் இருந்ததோ அல்லது என்னை சுற்றியோ இருந்த ஒரு சக்தி என்னுள் உள்ளுணர்வாக வெளிப்படுத்திய பதில்கள் ஏராளம். அவற்றைக் கொண்டு என்னால் பிரபஞ்சத்தின் பூரணத்தையும், இறை பேராற்றலின் உண்மைகளையும், ஆழ்மனதின் இயல்பையும் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. எல்லாவற்றிலும் மேலாக நான் அந்த நேரத்தில் கேட்ட முக்கிய கேள்வி ஒன்று
“இனி என்ன என் கையில் உள்ளது. இந்த பொருள் மட்டுமே பிரதானம் என்று வாழும் உலகத்தில் ஒரு ஜீரோவாக என்னால் எப்படி வாழ முடியும்? அதற்கு என்னை பேசாமல் சாகடித்திருக்கலாமே” என்பதுதான்
அப்போது எனக்கு கிடைத்த பதில்
“மகனே உனக்கு அந்த ஜீரோவின் அருமை தெரியவில்லை. மற்ற எந்த எண்ணையும் பகுக்க முடியும். ஆனால் அந்த ஜீரோவை பகுக்க முடியாது. அதன் முடிவு முடிவிலி என்பதுதான் அல்லவா. நீ ஜீரோ என்று வருத்தப்படுகிறாய். முடிவிலா உன் ஆற்றல் உன்னுள் அடங்கியிருக்கிறது என்று உணர மறுக்கிறாய். உன்னிடம் என்ன இல்லை என்று நீ நினைக்கிறாய். மனிதர்கள் உருவாக்கிய அச்சடித்த காகிதம்தான் உன்னை நிர்ணையிக்கிறதா என்ன? அதற்கும் மேலான உனக்கு கொடுக்கப்பட்டிருக்கும், உன் அனுபவங்களால் விளைந்திருக்கும் ஒரு புதையல் களஞ்சியம் உன்னிடம் உள்ளதே. அதை நீ மறுப்பாயா? அதனை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள உன்னால் முடியாதா என்ன. ஜீரோவின் ஆற்றலை உலகுக்கு காட்ட தொடங்கு. மற்றவை எல்லாம் தானே வரும்”
என்னால் அந்த கணங்களை இப்போதும் மறக்க முடியாது. அந்த நொடிகள் இப்போதும் எனக்குள் ஒரு அதிர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அன்று என்னிடம் இருந்ததெல்லாம் ஒரு கம்ப்யூட்டர், ஒரு இண்டர்நெட் கனென்க்ஷன் மட்டுமே. எனக்கு தெரிந்ததெல்லாம் சிறுக சிறுக இணையத்தில் பகிரத் தொடங்கினேன். என்னென்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே கவனிக்கத் தொடங்கினேன். திட்ட்மிட்டேன். ஒவ்வொரு செயல்களிலும் பிரபஞ்சத்தின் துணை தேடினேன். இனி என்னால் பொருளாதார ரீதியாக முன்னேறவே முடியாது என்ற நிலையில் இருந்த போது என்னை தேடி வந்தார் பால்யகால நண்பர் ஒருவர். என் செயல்களை செய்ய பிரபஞ்ச பேராற்றல் அனுப்பிய ஒரு தூதுவராகவே அவர் வந்தார். படுக்கையில் சுருண்டிருந்த என்னை
“எங்களது நிறுவனத்தின் மீடியா பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும். என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ அவற்றை எல்லாம் செய்யுங்கள்,”
என்று தான் அமைத்த ஒரு நிறுவனத்தின் போர்டு டைரக்டராக என்னை நியமித்தார். ஒரு மீடியா மற்றும் அனிமேஷன் ப்ரடக்ஷன் நிறுவனத்தை மீண்டும் என்னால் தொடங்க முடிந்தது. இன்று நான் உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதற்கு பிரபஞ்சத்தின் இந்த சமிக்ஞைகளும், நிகழ்வுகளும் தான் காரணம். என்னால் பிரபஞ்ச விதிகளை என் அனுபவங்களில் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. ஆழ்மனதின் அற்புத சக்தி மலைகளையும் நகர்த்த வல்லது என்பதை உணர முடிந்தது. இப்பிரபஞ்சத்தின் வடிவமைப்பு சூக்குமமாக புரிந்து கொள்ள தொடங்கிவிட்டால் வாழ்வில் உன்னதங்களை அடைய முடியும் என்பதை தெளிந்து கொள்ள முடிந்தது. இன்று பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஈர்ப்பு விதி மட்டுமல்ல நம் வாழ்வை பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அமைப்பும் விதிகளும் நியந்திரித்து கொண்டிருக்கின்றன என்பதை முழுமையாக புரிந்து கொண்டேன் நான்.
இந்த விஷயங்களை எல்லாம் ஒவ்வொரு சக மனிதரும் புரிந்து கொண்டால் ஒவ்வொருவரின் வாழ்விலும் எவ்வளவு அற்புதமான மாற்றங்களெல்லாம் வரும் என்பதை எண்ணி, அதற்காகத்தான் பிரபஞ்சம் என்னிடம் “உள்ளதை பகிர்” என்று சொல்லியிருக்கிறது என்பதை உணர்ந்து 16.01.2012ம் ஆண்டு “ஆல்ஃபா அட் ஒமேகா ஃபவுண்டேஷன்” என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி ஒவ்வொருவருக்கும் எல்லா ரீதியிலும் நான் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து வருகிறேன்.
இந்த “அகம், அற்புதம்” இணைய தளமும் இந்த பயணத்தின் ஒரு பகுதிதான். ஆல்ஃபா அட் ஒமேகாவின் மீடியா பிரிவாக “அகம், அற்புதம்” அக்டோபர் 8, 2017ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் வழியே இப்போது சோஷியல் மீடியாவிலும், இணையதளங்களிலும் எனது அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன்.
எனது கதையில் பிரபஞ்ச விதிகள் எப்படி செயல்பட்டன என்பதை விளக்கும் எனது காணொளி இது.
நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!