உங்களுக்குள் எதிர்மறைகள் எங்கிருந்து எழுகின்றன என்பது இந்த பயிற்சித்தாளில் இருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் ஆழ்ந்து யோசித்து பதில் எழுதுவதன் மூலம் விளங்கும். இந்த கேள்விகள் லூயிஸ் ஹே அவர்களின் “நல்வாழ்வு நம் கையில்” புத்தகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டவை ஆகும். பலரின் மாற்றத்திற்கு உதவிய இந்த பயிற்சி உங்களுக்கும் நன்மையே செய்யட்டும்.
உங்களுடைய பெற்றோர்கள் சொல்லிய தவறான விஷயங்களாக நீங்கள் கருதுபவற்றை ஒரு தாளில் பட்டியலிட வேண்டும். நீங்கள் கேட்ட அந்தத் தவறான செய்திகள் என்னென்ன? நிறைய அவகாசம் எடுத்துக் கொண்டு, ஆழமாக யோசித்து, எவ்வளவு முடியுமோ அத்தனை தகவல்களையும் ஒன்று விடாமல் எழுதுங்கள். இதற்கு சுமார் அரைமணி நேரம் போதும்.
பணம் பற்றி அவர்கள் என்ன சொன்னார்கள்?
உங்களுடைய உடல் குறித்து அவர்கள் என்ன கூறினார்கள்?
அன்பு, உறவுகள், சொந்தங்கள் பற்றியெல்லாம் என்னென்ன கூறியிருக்கிறார்கள்?
உங்களுடைய ஆக்கபூர்வமான திறமைகள் பற்றி என்ன சொன்னார்கள்?
உங்களை ஆட்டிப்படைக்கும் அல்லது படைத்த அல்லது எதிர்மறையான விஷயங்கள் என்று எவற்றையெல்லாம் குறிப்பிட்டார்கள்?
உங்களால் முடிந்தால் பாரபட்சமின்றித் திறந்த மனதுடன் இவற்றை எல்லாம் வாசித்துப் பார்த்து, “ஓ இங்கிருந்துதான், இந்த நம்பிக்கைகள் உருவாகியுள்ளன” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக புதியதொரு தாளை எடுத்துக் கொண்டு, இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆராய்வோம்.
நீங்கள் குழந்தையாக இருந்த சமயத்தில் வேறு என்னென்ன எதிர்மறைத் தகவல்களை கேட்டீர்கள்?
உறவினர்களிடமிருந்து….
ஆசிரியர்களிடமிருந்து….
நண்பர்களிடமிருந்து….
உங்கள் மீது அதிகாரம் செலுத்தியவர்களிடமிருந்து….
உங்களுக்கு மத போதனை செய்தவர்களிடமிருந்து….
இவையனைத்தையும் அந்தத் தாளில் எழுதிக் கொள்ளுங்கள். தேவையான நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி எழுதும் போது உங்கள் உடலில் என்னென்ன உணர்வுகள் பொங்குகின்றன என்பதை கவனியுங்கள்.
இந்த இரண்டு காகிதங்களிலும் நீங்கள் எழுதியுள்ள அத்தனை விஷயங்களும் உங்களுடைய நினைவிலிருந்து அடியோடு அப்புறப்படுத்தப்பட வேண்டியவை.
“நான் பயனற்றவன், என்னுள் எந்த தனித்துவமும் இல்லை, திறமைகளும் இல்லை” என்ற உணர்வு உங்களுக்குள் உருவாக்கியவைதான் இந்த நம்பிக்கைகள்.
நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!