“சார், நான் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கிறதே சார். நீங்கள் சொல்லும் வகையில் எல்லாம் செய்கிறேன். ஆழ்மனப்பயிற்சிகள் எல்லாம் செய்கிறேன். ஆனால் என்ன கேட்கிறேனோ அதற்கு எதிர்மாறாகத் தான் நடக்கிறது”, என்று என்னிடம் சந்தேகக் கேள்வி எழுப்பியவர்கள்தான் அதிகம். எல்லோருக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது. ஆரம்பத்தில் எனக்கும் அதே பிரச்சினைதான். “என்னடா நிறைய ஆர்டர் வர வேண்டும், அதனால் நிறைய பணம் வர வேண்டும் என்று கேட்டால் அதற்கு எதிர்மாறாக இருக்கும் ஆர்டரையும் சரிவர செய்ய முடியாமல், கடனும் அதிகமாகி விட்டதே ஏன்?” என்று நான் புழுங்கியதுண்டு. “உன்னிடம் நான் என்ன கேட்டேன், என்னை ஏன் வதித்துக் கொண்டிருக்கிறாய்,” என்று இறைவனை ஏக வசனத்தில் திட்டி தீர்த்ததுண்டு. அப்போதெல்லாம் நான் என்ன தவறு செய்து கொண்டிருக்கிறேன் என்று எனக்கு புரியவில்லை.
ஏதோ ஒரு தருணத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, சரியாக சொன்னால் புலம்பிக் கொண்டிருந்தபோது, “உன் பேச்சை கவனி வினோத், நீ செய்ய முடியும் என்று சொல்லும் விஷயத்திற்கும் உன் பேச்சிற்கும் சம்பந்தமே இல்லை. ஒன்றிற்கு பின் முரணாக இருக்கிறது. உன் பேச்சு முடியும் என்று சொல்கிறது, ஆனால் உள்ளில் உன் உணர்வுகள் உன் பயத்தை வெளிக்காட்டுகிறது”, என்று என் நண்பன் ஒருவன் படார் என்று முகத்தில் அடித்தாற் போல் சொன்னவுடன் அன்று இரவு முழுக்க, “அப்படியா, அப்போது உண்மையில் நான் என்னால் செய்ய முடியும் என்று நம்பவில்லையா?”, “என் பயம் தான் என்னை எதுவும் செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறதா?”, “அவ்வளவிற்கும் காரணம் என் தயக்கமும் பயமும் தானா?” என்று கேள்விகளால் என் மனதை துளைத்து பதில் பெற்றுக் கொண்டேன்.
ஆம். நம் விருப்பங்களை நாம் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் புரியும். நாம் நமக்கு கிடைக்கும் என்று நினைத்த விஷயங்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்க மாட்டோம். “அது நமக்கு கிடைக்குமா?”, “அது நமக்கு சாத்தியமா?” என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருப்போம்.
உதாரணத்திற்கு கல்வி பயிலும் மாணவர் ஒருவர், பரீட்சையில் வெற்றி பெறுவீர்களா என்று கேட்கும் போது
“கண்டிப்பா. செண்டம் எடுத்துடுவேன்”, என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படி சொல்லும் அதே நேரத்தில் “போன பேப்பர் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இந்த பேப்பரும் அப்படி வந்துட்டா எங்கேருந்து செண்டம்”, என்று யோசிக்கிறார் என்றால், நிச்சயம் அவர் பயமே அந்த பேப்பர் மிக எளிதானதாக இருந்தாலும் அவருக்கு மிகக் கஷ்டம் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும். இப்படி ஒரு சூழ்நிலையைத்தான் “தலைகீழ் முயற்சியின் விதி” என்கிறார்கள்.
வெளியில் கண்டிப்பாக என்று சொன்னாலும் உள்ளே என்னவாகி விடுமோ என்கிற முரண்பட்ட சிந்தனையே அந்த மாணவருக்கு ஒரு திரையாக அமைந்து விடுகிறது. நமது எந்த விருப்பமானாலும் பெரும்பாலும் அவற்றின் நிலை இதுதான்.
இந்த தலைகீழ் முயற்சி விதியை முதன் முதலில் டாக்டர் எமிலி கோ என்ற பிரெஞ்சு உளவியல் அறிஞர் தான் உலகிற்கு இவ்வாறு அறிவித்திருக்கிறார்.
“உங்கள் ஆழ்விருப்பங்களும் கற்பனையும் முரண்பட்டு நிற்கும் போது, வெற்றி பெறுவது உங்கள் கற்பனைதான்”
டாக்டர் எமிலி கோ
ஆழ்மனதின் அற்புத சக்தி புத்தகத்தில் டாக்டர் ஜோசஃப் மர்ஃபி இதைத் தெளிவாக விளக்கியிருப்பார்.
“தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ள ஒரு குறுகலான பலகையின்மீது நடந்து செல்லுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எந்த கேள்வியும் இன்றி, நீங்கள் அதை எளிதாகச் செய்துவிடுவீர்கள். ஆனால் இப்போது, அதே பலகை இருபதடி உயரத்தில் அந்தரத்தில் இரண்டு சுவர்களுக்கிடையில் குறுக்காக வைக்கப்பத்திருந்தால் நீங்கள் அதில் நடப்பீர்களா? பலகையின் மீது நடக்க நினைக்கும் உங்கள் விருப்பம் உங்கள் கற்பனையோடு முரண்பட்டு நிற்கும். நீங்கள் பலகையிலிருந்து தடுமாறி, அவ்வளவு உயரத்திலிருந்து கீழே வந்து நிலத்தில் விழுவது போல நீங்கள் கற்பனை செய்வீர்கள். அப்பலகையின் குறுக்கே நடக்க நீங்கள் விருப்பப்படலாம். ஆனால் கீழே விழுவது பற்றிய பயம் உங்களை அக்காரியத்தைச் செய்ய விடாமல் தடுக்கும். எனவே உங்கள் கற்பனைதான் இங்கு வெற்றி பெறுகிறது. பலகையின் மீது நடப்பதற்கு நீங்கள் கொண்டுள்ள விருப்பம், மன உறுதி, அல்லது முயற்சி தலைகீழாக ஆகும். தோல்வி குறித்து உங்களிடம் குடிகொண்டுள்ள ஆதிக்க எண்ணம் மீண்டும் வலிமையாக வலியுறுத்தப்படும்.
மனரீதியான முயற்சி பெரும்பாலும் சுயதோல்விக்கு வழிவகுக்கும், உங்கள் விருப்பத்திற்கு நேர்மாறானதை உருவாக்கும். ஒரு சூழ்நிலையிலிருந்து மீள்வதற்குச் சக்தியற்று இருப்பது குறித்து உங்கள் மனதிற்கு கொடுக்கப்படும் தூண்டுதல்கள் உங்கள் மனதை ஆக்கிரமிக்கின்றன. எந்த எண்ணம் உங்கள் மனத்தில் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதுதான் உங்கள் ஆழ்மனத்தைக் கட்டுப்படுத்துகிறது. இரண்டு முரண்பட்டக் கருத்துக்களில், வலிமை மிக்கது எதுவோ அதையே உங்கள் ஆழ்மனம் ஏற்றுக் கொள்ளும்.”
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் நாம் நினைப்பதொன்று நடப்பதொன்றாக இருக்கிறது என்று.
இதற்கு என்னதான் தீர்வு?
என் அனுபவத்தில் நான் கண்டவையை கீழே தந்திருக்கிறேன். பயன்படுத்தி பாருங்கள்.
- முதலில் எப்போதும் எல்லாம் வல்ல ஒரு கை நம்மை எல்லா நேரங்களிலும் வழிநடத்துகிறது என்று நம்பிக்கைக் கொள்ளுங்கள். இந்த நம்பிக்கையானது “இதெல்லாம் சாத்தியமா?” என்ற கேள்வியை இல்லாமல் ஆக்கும். எல்லாம் வல்ல இறைபேராற்றலுக்கு எல்லாம் சாத்தியமே.
- நாம் நம் விருப்பத்தை அடைய நிறைய முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்குமோ என்ற பயம் நம்மை ஆட்கொள்வது சகஜம் தான். பிரபஞ்சத்தில் “குறைந்த அளவு முயற்சியின் விதி (Law of Least Effort)” என்று ஒன்று உண்டு. இப்பிரபஞ்சத்தில் எல்லாம் தானே அவற்றின் தன்மைக்கேற்ப கனக்கச்சிதமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் ஒரு விருப்பத்தை நிறைவேற்ற எண்ணும் போது, அதற்கான முயற்சிகளை பற்றிய சிந்தனையை தவிர்த்து விடலாம். விருப்பத்தை அடைந்து விட்டதாக மட்டும் நினைத்து மனதில் சுக சிந்தனையை வளர்க்கலாம். இந்த உணர்வே உள்ளிலிருந்து ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி, செய்ய வேண்டிய ஒவ்வொரு செயலையும் உணர்த்தி நம்மை வெற்றிக் கோட்டுக்கு இட்டு செல்லும்.
- ஆழ்மனதில் குடிகொண்டுள்ள பயத்தை சுயப்பிரகடனங்கள் கொண்டு போக்கலாம். அதிகாலையிலும் இரவில் உறக்கத்திற்கு முன்பும் நல்லொரு சுயப்பிரகடனம் சொல்லுதல் கொண்டு ஆழ்மனம் கீழ்ப்படியும்.
- உங்கள் விருப்பம் எதை சார்ந்து இருக்கிறதோ, அதே களத்தில் சோதனைகள் தாண்டி சாதனைகள் படைத்த மனிதர்களின் கதைகளை இண்டர்நெட்டிலோ, புத்தகங்களிலோ, காணொளிக் காட்சிகளிலோ வாசித்தும் கண்டும் நம்பிக்கை பெறலாம்.
நம்மால் எதுவும் சாத்தியமே என்ற மனநிலை தலைகீழ் முயற்சி எனும் விதியை முழு முயற்சி முழுமையான வெற்றி என்ற நிலைக்கு நிச்சயம் மாற்றி விடும்.
நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!