பயத்திலிருந்து விடுபட 3 எளிய வழிகள் – HOW TO OVERCOME FEAR
பயம் என்பது நமது மிகப்பெரிய எதிரி. இதைப்பற்றி வேறு எப்படியும் வர்ணிக்க முடியாது. ஒரு பாம்பையோ, புலியையோ பார்க்கும் பொழுது ஏற்படும் பயத்தைப்பற்றி நான் சொல்லவில்லை. நம் தினசரி வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பயத்தைப்பற்றி சொல்கிறேன்.
பயம் நமக்கு உதவுவதில்லை. மாறாக, அது நமக்கு தடையாகத்தான் உள்ளது. பயம் எந்த கதவையும் திறப்பதில்லை. ஒரு அடி முன்னே எடுத்து வைக்கக்கூட அது உதவி செய்வதில்லை. இரண்டு கால்களையும் கட்டிப்போட்டு வைக்கிறது பயம்.
இன்றைய உளவியல் என்ன சொல்கிறது?
- உங்கள் பயங்களுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
- உங்கள் பயங்களை அரவணைத்துக்கொள்ளுங்கள்
- பயம் இருப்பது இயல்பானதுதான்.
யோசித்துப்பாருங்கள்.
பயத்துடன் வாழ்வது இயல்பானது என்றால், பயமே இல்லாமல் வாழும் மனிதனை இந்த உலகம் எப்படி பார்க்கும்? ஒரு அசாதாரணமான மனிதனைப்போல தானே பார்க்கும்?
பிரபஞ்சத்தின் படைப்பில் அப்படி ஒரு நிலை சாத்தியமா?
இல்லை.
நாம் எல்லோரும் பயத்தில் இருந்து விடுபட்டு வாழவே இந்த பிரபஞ்சம் விரும்புகிறது.
பயத்திற்கு பல அம்சங்கள் உள்ளது. அதில் முக்கியமானது, மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்பதாகும். இந்த பயம்தான் நம் வாழ்க்கை முறையை முடிவுசெய்கிறது. இதன் அடிப்படையில் தான், நாம் நம் வாழ்க்கை பயணத்தை செலுத்துகிறோம்.
நம்மில் பலர் பல அமைப்புகளில் சேர்ந்து பல செயல்களில் ஈடுபடுகிறோம். இல்லை என்றால் மற்றவர் நம்மைப்பற்றி தவறாக நினைப்பார்கள் என்ற பயம்..
தேவை இருக்கிறதோ, இல்லையோ, பல பொருட்களை வாங்குகிறோம்.
பிடிக்கிறதோ, இல்லையோ, பல நேரங்களில் அடுத்தவர் சொல்வதற்கு “ஆம்’ என்று தலை ஆட்டுகிறோம். இல்லை என்றால் மற்றவர் நம்மை மதிக்க மாட்டார்கள் என்ற பயம்.
ஆனால், இப்படி வாழ வேண்டிய அவசியம் இல்லை. பின்வரும் 3 எளிய வழிமுறைகளை பின்பற்றினால் பயத்திலிருந்து விடுபடலாம்.
முதலில், இந்த பிரபஞ்சம் நம்மிடம் எல்லையற்ற அன்புகொண்டிருக்கிறது என்ற உண்மையை புரிந்துகொள்ளுங்கள். இந்த அன்பின் அளவு மாறுவதில்லை.
என்றுமே !
இரண்டாவது, பயத்திலிருந்து விடுபடுவதற்கான எல்லா வழியையும் இந்த பிரபஞ்சம் நமக்கு காட்டும் என்பதை உறுதியாக, திடமாக நம்புங்கள். நாம் பயமின்றி வாழ்வதையே இந்த பிரபஞ்சம் விரும்புகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். இந்த பிரபஞ்சத்திடம் உங்களை முழுமையாக சமர்ப்பித்து விடுங்கள்.
மூன்றவது, எல்லாரையும் திருப்திப்படுத்தி வாழ்வது என்பது சாத்தியப்படாது. எல்லோர் பார்வையிலும் நாம் சரியாக தெரியவேண்டும் என்று நினைப்பதை நிறுத்துங்கள். நமக்கு எது சரிப்பட்டு வரும், நமக்கு பிடித்தது என்ன என்பதை தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு முடிவு எடுக்கும் பொழுது, “இதை பயத்தினால் எடுக்கப்பட்ட முடிவா?” என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கைக்கு சரியானதை, சிறப்பானதை, உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்று பொருட்படுத்த வேண்டாம்.
பயமின்றி வாழ்வது சாத்தியமே !
வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன் !
[simple-author-box]
நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!